தீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு
அபுதாபி: தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று இஸ்லாமிய கூட்டுறவு நாடுகள் அமைப்பில், அழுத்தந்திருத்தமாக கருத்தை முன் வைத்தார்.
இஸ்லாமிய நாடுகளில் கூட்டுறவு அமைப்பு (OIC) மாநாடு அபுதாபியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
முதல் முறையாக இந்தியாவிற்கு இப்படி ஒரு கவுரவத்தை இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு வழங்கியது.
சுஷ்மா சுவராஜ் பங்கேற்பு
அதேநேரம், சுஷ்மா ஸ்வராஜை சிறப்பு அழைப்பாளராக வரவேற்பதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பை பதிவு செய்தது. மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்தது. இருப்பினும், இதை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பொருட்படுத்தவில்லை. சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சுஷ்மா சுவராஜ் இன்று உரையாற்றினார்.
இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு சூப்பர் வெற்றி.. அபிநந்தன் மீட்கப்பட்டது எப்படி?
மனிதாபிமானம்
தனது உரையில் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: மனிதாபிமானத்தை காப்பாற்ற வேண்டுமானால், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மற்றும் அவற்றுக்கு நிதி உதவி செய்யும் நாடுகளுக்கு (மறைமுகமாக பாகிஸ்தானுக்கு குட்டு) அவற்றை நிறுத்திக் கொள்ளுமாறு நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டியது அவசியமாக உள்ளது. தீவிரவாதம் பயங்கரவாதம் என பல பெயர்களில் அது மக்களுக்கு அச்சுறுத்தலாக நிலவுகிறது.
தீவிரவாதத்திற்கு எதிராக
உயிர்களை தீவிரவாதம் அழிக்கிறது. நாடுகளை புரட்டிப்போடுகிறது. இந்த உலகத்தை மோசமான வாழ்விடமாக தீவிரவாதம் மாற்றுகிறது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து உலகளாவிய தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் இந்த மாநாட்டிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 1.3 பில்லியன் இந்தியர்களின் வாழ்த்துக்களை சுமந்து வந்து உள்ளேன். இதில் 185 மில்லியன், முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் வாழ்த்துக்களும் அடங்கும்.
அமைதியான இஸ்லாம்
இஸ்லாம் என்பதற்கு அமைதி என்ற பொருளும் உண்டு. அல்லாவின் 99 பெயர்களில் ஒன்று கூட வன்முறை என்று பொருள்படாது. அதேபோல் உலகத்தில் உள்ள ஒவ்வொரு மதமும், அமைதியையும் சகோதரத்துவத்தையும் மட்டும்தான் போதிக்கின்றது. பழமையான, ரிக் வேதத்தில், "கடவுள் ஒருவரே, மனிதன் அவரை பல பெயர்களில், வடிவங்களில் வணங்குகிறான்" என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால், மதத்தை தவறாக சித்தரித்து தீவிரவாதம் வளர்த்தெடுக்கப்படுவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
புறக்கணித்த பாகிஸ்தான்
மொத்தம் 57 முஸ்லிம் நாடுகள் இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு வழங்கியதற்காக உறுப்பு நாடுகளில் ஒன்றான, பாகிஸ்தான் இதை, புறக்கணித்து விட்டது.