துபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்
அபுதாபி: துபாயில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி துபாய் முஸ்ரிப் பாரக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்திலிருந்து 1970 ம் வருடத்திலேயே துபாயை நோக்கி பயணம் செய்தனர்.
இந்தியாவிலிருந்து மற்ற பிற மாநிலங்களிலிருந்தும் லான்ச் எனப்படும் பெரிய படகுகளில் துபாய் நோக்கி பிழைப்பிற்காக மக்கள் பயணித்தனர்.
துபாய் வளர்ச்சியில் ஆரம்ப காலக்கட்டங்களில் இவர்களின் உழைப்பும் இன்றியமையாதது.
துபாய்
கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து துபாயில் வசிக்கும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மக்களின் இந்த ஒன்று கூடல் நிகழ்விற்கு "வி.களத்தூர் சங்கமம்" என்று பெயரிட்டிருந்தனர். இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சி துபாய் முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்றது. ஆரம்ப காலங்களில் துபாய் வந்திருந்தவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பியபோதிலும் அவர்களின் வாரிசுகள் தொடர்ந்து துபாயில் வசித்து வருகின்றனர்.
விருந்து உபசாரம்
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கான விளையாட்டுகளும் நடைபெற்றன. பின்னர் விருந்து உபசாரம் நடைபெற்றது. துபாய் முஸ்ரிப் பார்க் களைகட்டியிருந்தது.
வருமானம் ஈட்டுதல்
நிகழ்வின் இறுதியில் 1970 காலக்கட்டத்திலேயே துபாய்க்கு வந்து உழைத்து வருமானம் ஈட்டியதோடு மட்டுமல்லாமல் நாட்டுக்காகவும் ஊருக்காகவும் உதவும் வகையில் பல்வேறு நற்காரியங்கள் செய்து இளையோருக்கு வழிகாட்டியமைக்காக, ஆரம்பம் காலம் தொட்டு செயல்பட்டு, பின்னர் அவர்களின் வழியில் செயல்பட்ட முக்கியநபர்களுக்கு அவர்களின் சேவையை நினைவுகூறும் விதமாக அவர்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. பாராட்டு விருதுகளை அவரவர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
ஏராளமானோர் பங்கேற்பு
வி.களத்தூருக்கு திரும்பியிருந்தாலும் முன்னோர்களின் சேவையை நினைவு கூர்ந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது. வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சியில் சுமார் 600 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி, புகைப்படம்: கமால் பாஷா, துபாய்