வளைகுடா நாடுகளில் புனித ரமலான் கொண்டாட்டம்... நாடு, மொழி கடந்து கட்டித்தழுவி மகிழ்ச்சி
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில், இன்று செவ்வாய்க்கிழமை புனித ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலம் நிறைவு பெற்ற பிறகு ரமலான் பெருநாள் கொண்டாடப்படும். வளைகுடா பகுதியில் பிறை தொடர்பான அறிவிப்புகளை சவூதி அரேபிய அரசு தான் அறிவிக்கும். அந்த வகையில் நேற்று இரவு , ரமலான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் பிறை தென்பட்டதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, வளைகுடா முழுவதிலும் ஈத் பெருநாள் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித், துபாயில் ஜுமேரா உள்ளிட்ட பெரிய பள்ளிவாசல்கள் மற்றும் பெருநாள் தொழுகைக்காக கட்டப்பட்டுள்ள ஈத்கா மைதானங்களில் இந்த ஈ்துல்பித்ர் எனும் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்
துபாயில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டேரா பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பெரும்பான்மையான தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கடமையை நிறைவேற்றினர்.
இதுகுறித்து கடந்த 10 வருடங்களாக துபாயில் வசித்துவரும் தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர யைச் சேர்ந்த மருந்தாளுநர் ஹஸன் முகம்மது கூறுகையில், நாடு விட்டு நாடு பயணிப்பது என்பது தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போனது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற சொல்லாடல் உண்டு. மேலும் 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழியும் உண்டு. ஆக வெளிநாட்டுப் பயணம் என்பது தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது.
சிறப்பு தொழுகை
அந்த வகையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினர் துபாய்க்கு பயணப்பட்டு இருக்கிறோம். துபாய் அரசாங்கம் வெளிநாட்டு மக்களுக்கு பல்வேறு வகையான வசதி வாய்ப்புகளை செய்துள்ளது. டேரா பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. காலை 6 மணிக்கு தொழுகை நடைபெற்றது. அதன்பிறகு உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம் என்று கூறினார்.
மகிழ்ச்சி
தொழுகை முடிந்தது என்பதன் அறிகுறியாக ஈத்கா மைதானத்தில் சிறிய ரக பீரங்கி குண்டு முழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்த அனைவரும், நாடு, மொழி பாகுபாடின்றி, கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.