சூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி?
அபுதாபி: மும்பை இந்தியன் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே, நேற்று நடைபெற்ற போட்டியில் பரபரப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியது.
அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின்போது, பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, மும்பை அணியின் சூரியகுமார் யாதவிடம் வம்பு செய்ததும், அதற்கு சூர்ய குமார் பதிலடி கொடுத்ததும் தான் இந்த பரபரப்புக்கு காரணம்.
நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி ஆரம்பத்தில் நன்றாக அடித்து ஆடியது. ஆனால் இறுதிக்கட்ட நேரத்தில் சொதப்பியது. இதனால் 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அசத்திய சூர்யகுமார் யாதவ்
மும்பை அணி ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாடிய போதிலும், சூர்யகுமார் யாதவ் வெறும் 43 பந்துகளில் 79 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெல்வதற்கு உதவினார். இதன்மூலம் நடப்பை ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மும்பை விஸ்வரூபம் எடுத்தது.
360 டிகிரி பேட்ஸ்மேன்
மும்பையை பூர்வீகமாக கொண்ட 30 வயதாகும் சூர்யகுமார் யாதவ், முன்பு கொல்கத்தா அணிக்கு ஆடியவர். இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார். இந்தியாவின் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கிரிக்கெட் பிரபலங்களால் வர்ணனை செய்யப்படுபவர். அதாவது தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ்க்கு இணையாக பேசப்படுபவர். கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ரன் குவிப்பு செய்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் ரன் குவிப்பு
2018 ஐபிஎல்: 500+ ரன்கள், 2019 ஐபிஎல்: 400+ ரன்கள், 2020 ஐபிஎல்: 350+ ரன்கள். இப்படி நீள்கிறது சூர்யகுமார் யாதவ் சாதனை. ஆனால் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இந்த விரக்தி அவரிடம் வெளிப்படையாகவே தெரிந்தது. இருப்பினும் அதை விளையாட்டில் காட்டிக்கொள்ளாமல் வெற்றியாக மாற்றுவதில் உறுதியாக இருந்தார்.
கோபமடைந்த விராட் கோலி
ஆட்டம் கைநழுவி போவதை உணர்ந்த விராட் கோலி 13வது ஓவரின் போது சூரியகுமார் அடித்த ஒரு பந்தை பீல்டிங் செய்து கொண்டு அவரை நோக்கி முறைத்தபடி வந்தார். ஆனால் இந்திய அணி கேப்டன் ஆயிற்றே.. அணிக்குள் செல்ல அவரது தயவு தேவைப்படுமே என்றெல்லாம் யோசிக்கவில்லை சூர்யகுமார் யாதவ். வைத்த கண் மாறாமல் அப்படியே கோலியை பார்த்துக்கொண்டிருந்தார். கோலியும் சூரியகுமாரின் பக்கத்தில் வந்து விட்டார். இதனால் மைதானம் பரபரப்பானது. இருப்பினும் இருவரும் மோதிக் கொள்ளவில்லை. எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அருகே வந்த கோலி அப்படியே, கையிலிருந்த, பந்தை துடைத்து மெருகேற்றிவிட்டு சென்று விட்டார்.
பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவ்
20வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் சூர்யகுமார் யாதவ். உடனடியாக தனது நெஞ்சில் கை வைத்து நான் இருக்கிறேன் என்பது போல கையை காட்டி தனது ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினார். இது விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் தொடர்ந்து இந்திய அணியில் தன்னை சேர்க்காமல் இருப்பதற்கான பதிலடியாக அவர் இதைச் செய்திருக்க வேண்டும் என்று மும்பை ரசிகர்கள் கூறுகிறார்கள்.
ஸ்லெட்ஜிங்
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் கூட, ஐபிஎல்லில் எதிரணிக்காக விளையாடி, விராட் கோலியை அவுட் செய்து விட்டால் அவரை பார்த்து முறைக்காமல், அமைதியாக செலப்ரசன் செய்துவிட்டு போய் விடுவார்கள். ஆனால், சூர்யகுமார் யாதவ் இன்னும் இந்திய அணியில் செலக்ட் செய்யப்படவில்லை என்றாலும் தன்னை ஸ்லெட்ஜிங் செய்த கோலியை பார்த்து அச்சப்படாமல் முறைத்துள்ளார், பதிலடி கொடுத்துள்ளார்.
விராட் கோலி செயல்
இந்த சம்பவம் தான் இப்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரம், விராட் கோலியை ஒரு விஷயத்தில் பாராட்டவேண்டும். என்னதான் போட்டியின் போது இருவரும் மோதிக் கொண்டாலும், போட்டி முடிந்ததும் முதல் ஆளாக வந்து சூரியகுமாருக்கு, கைகுலுக்கி விட்டு சென்றார்.
ரசிகர்கள் ஆதரவு
இதனிடையே சூர்ய குமார் யாதவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இந்த நெட்டிசன் கூறியதை பாருங்கள்:
நம்மை நிராகரித்த இடத்தில் திரும்பி வந்து நாம் நிராகரிக்க முடியாத சக்தியாக மாறுவது . அப்படி ஒரு Performance இன்று சூர்ய குமார் யாதவ் கிட்ட இருந்து. இப்படி கூறுகிறார் இந்த நெட்டிசன்.