ஆஹா.. சரத்குமாருக்கு இந்தப் பதவி காத்திருக்காம்.. இதுதான் ரகசிய டீலாம்!
சென்னை: கூட்டணி சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் முடிந்த பின்னர் அதிமுக கூட்டணிக்கு வந்து சேர்ந்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாருக்கு ராஜ்யசபா பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதாம்.
தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தீவிரமாக அணி சேர்த்து வந்தபோது விஜயகாந்தின் தேமுதிக யாருடன் செல்லும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் திடீரென்று ஒருநாள் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விஜயகாந்தை சென்று சந்தித்து பரபரப்பு கிளப்பினார்.
அப்போது விஜயகாந்த், தினகரன், சரத்குமார் ஆகியோர் இணைந்து ஒரு அணியாக போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தேமுதிக யு டர்ன் அடித்து அதிமுகவோடு தஞ்சமடைந்தது.
தொங்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அதிமுகவுக்கு ஆதரவு- சரத்குமார் சபாஷ் பேட்டி
சரத்குமார்
அதன் பின்னர் சமகவை யாரும் சீண்டுவோர் இல்லாமல் இருந்தது. இதனால் தனித்து போட்டி என்று அறிவித்தார் சரத்குமார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சமக தொண்டர்களும் கட்சித் தலைமையிடம் விருப்ப மனு அளித்து வந்தனர். இப்படியிருக்கையில் சரத்குமாரிடம் பேசிய துணை முதலமைச்சர் நீங்கள் தனித்து போட்டியிட வேண்டாம் எங்களுடன் வந்து விடுங்கள் என்று கூறினாராம்.
நேரில் போய் அழைப்பு
அதன் பின்னர் சரத்குமாரை நேரில் சந்தித்த ஓபிஎஸ் அதிமுகவுக்கு வந்துவிடும்படி மீண்டும் அழைத்ததாக தெரிகிறது. அப்போது எங்களுக்கு ஒரு தொகுதியாவது கொடுங்கள் என்று கேட்டபோது தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து விட்டது. ஆகவே உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறோம் என்று கூறினாராம். இதன் பின்னர் தனது கட்சி தொண்டர்களுடன் ஆலோசித்த சுப்ரீம் ஸ்டாரும் அதிமுகவோடு ஐக்கியமாவது என்ற முடிவை எடுத்துள்ளார்.
பீரங்கியாக மாறுகிறார்
அதிமுகவில் ஜெயலலிதாவின் பிரச்சாரம் இல்லாதது ஒரு பெரும் குறையாக இருப்பதாக அதிமுகவினரே குறைபட்டு கொள்கிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சூறாவளிப் பிரச்சாரம் செய்வதில் பல சிரமங்கள் உள்ளதாக கருதுகிறாராம். மைக்கை பிடித்துக் கொண்டு பேசுவதால் அடிக்கடி கைவலி வருகிறதாம் அதனால்தான் காலர் மைக்-கிற்கு அவர் மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவுக்கு ஸ்டார் பேச்சாளர்கள் இருந்தாலும் சரத்குமார் தங்கள் அணிக்கு பிரச்சாரம் செய்தால் நன்றாக இருக்கும் என அதிமுகவும் கருதுகிறது. எனவேதான் அவரை இப்போது தங்கள் அணிக்கு அழைத்து வந்துள்ளார்கள். அவரோடு சேர்த்து ராதாரவியும் வந்து சேர வாய்ப்புள்ளது.
நிறைவேற்றப்படும் தேவைகள்
இந்த நிலையில் அதிமுகவுக்கு வர அழைப்பு வந்ததும் சரத்குமாரும் தங்களது தேவைகளை கூறினாராம். அப்போது உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறோம் அதோடு அதிமுக மக்களவை மற்றும் இடைதேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் சரத்குமாருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. ஆக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் விரைவில் எம்.பி சரத்குமாராக உள்ளாராம்.