காஷ்மீர் துயரம்.. என் பையன் செத்துட்டானா.. அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத சுப்பிரமணியின் தந்தை
2 தமிழக வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களின் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
அரியலூர்: என்னப்பா சொல்றீங்க? என் பையன் செத்துட்டானா? என்று சுப்பிரமணியின் தந்தையும், 4 மாச கர்ப்பிணிக்கு எப்படிப்பா தகவலை சொல்றது என்று சிவசந்திரனின் உறவினர்களும் கதறி அழுகிறார்கள்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்த 44 பேரில் 2 வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இருவரும்தான் உயிரிழந்திருக்கிறார்கள்.
பையன் செத்துட்டானா?
இதில் சுப்பிரமணியத்துக்கு, கல்யாணம் ஆகி ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. பொங்கலுக்கு லீவில் ஊருக்கு வந்து போயிருக்கிறார். நேற்றும்கூட மனைவிக்கு போன் செய்து பேசியிருக்கிறார். ஆனால் "என்னப்பா சொல்றீங்க... என் பையன் செத்துட்டானா?" என்று அதிர்ச்சி நிறைந்த வலிகளுடன் கேட்கிறார் சுப்பிரமணியம் தந்தை.
ஸ்விட்ச் ஆப்
மகன் இறந்தது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "இந்த வேலைக்கு போய் 5 வருஷம் ஆச்சு. இன்னும் 2 வருஷம் வேலை பாக்கணும்னு சொன்னான். நேத்துகூட அவன் மனைவிக்கு போன் செய்தான். திரும்பவும் நாங்கள் போன் பண்ணும்போது ஸ்விட்ச் ஆப் ஸ்விட்ச் ஆப்னு வந்தது.
தகவல் வரல
அதுக்கப்பறம் அவன் ஃப்ரண்டுங்கதான் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. அப்பறம்தான் எங்களுக்கு விஷயமே தெரிஞ்சது. இந்த குடும்பமே அவனை வச்சிதான் நடந்துட்டு இருக்கு. தைப்பொங்கலுக்கு ஊருக்கு வந்து போனான். எங்களுக்கு அவன் பிரண்டுங்க சொல்லிதான் தகவல் வந்தது. இன்னும் கவர்ன்மென்ட்டுல இருந்து யாருமே சொல்லல" என்கிறார்.
காது கேளாத தங்கை
இதைவிட பரிதாப நிலை கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரனுடையது. இவரது அப்பா பெயர் சின்னையன். சின்ன வயதில் இருந்தே ராணுவ வீரனாக வேண்டும் ஆசைப்பட்டவராம் சிவசந்திரன். காது கேளாத ஒரு தங்கை இருக்கிறாராம். கடந்த வருடம்தான் அவரது அண்ணன் உயிரிழந்துள்ளார். அதனால் குடும்பத்தையே தாங்கும் பொறுப்பு சிவசந்திரனுக்கு ஏற்பட்டுள்ளது.
4 மாத கர்ப்பிணி
அதனால் குடும்பம் மேல அதிகம் பாசம் உடையவராம். போனவாரம்தான் ஊருக்கு வந்து திரும்பி சென்றுள்ளனர். இவருக்கு 2 வயதில் குழந்தை இருக்கிறான். இப்போது மனைவி 4 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். கணவன் உயிரிழந்த விவகாரத்தை கர்ப்பவதிக்கு எப்படி சொல்வது என்றுகூட தெரியாமல் திணறி வருகிறது அக்குடும்பம்.