வடை, பாயாச விருந்து.. 39 பேருக்கு வாந்தி, மயக்கம்.. சடங்கு விழாவில் பரபரப்பு
விருந்து சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அரியலூர்: சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வடை, பாயாசம் சாப்பிட்ட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய கருக்கை என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சக்திவேல். இவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று முன்தினம் நடத்தி உள்ளார். இதற்காக தெரிந்தவர்கள், உறவினர்கள் என எல்லாருக்குமே சக்திவேல் அழைப்பு விடுத்திருந்தார்.
அப்போது சிறப்பாக விழா நடைபெற்று முடிந்ததும், வந்தவர்களுக்கு வடை, பாயாசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது சிலர் திடீரென வாந்தி எடுத்தனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர்.
விருந்து சாப்பிட்ட 39 பேருக்கு இப்படி திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால், அவர்களில் 32 பேர் ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 7 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இரண்டு ஆஸ்பத்திரிகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2-வது நாளாக தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. விருந்து சமைக்கும்போது, ஏதாவது காலாவதியான உணவு பொருட்கள் கலந்துவிட்டதா என ஆண்டிமடம் சுகாதாரத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.