கஜா புயல்.. அரியலூர் சிறுவன் நிறைநெஞ்சனும், அவன் தங்கையும் செய்த நெகிழ்ச்சியான செயல்!
தங்கள் உண்டியல் பணத்தை நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர் இரண்டு குழந்தைகள்.
Recommended Video
அரியலூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது உண்டியல் பணத்தை நிவாரண நிதியாக வழங்கி பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர் அரியலூரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள்.
கஜா புயலால் நாகை, திரு வாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு மட்டுமன்றி தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், உதவுவதற்கு மனம் இருந்தால் மட்டும் போதும் என நிரூபித்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள். வழக்கறிஞர் ஜெயக்குமாரின் குழந்தைகளான இவர்கள் முறையே நிறைநெஞ்சன் 9ம் வகுப்பும், சாதனா 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
தொடர்ந்து தொலைக்காட்சிகளில் கஜா புயல் பாதுகாப்பு குறித்த காட்சிகளைப் பார்த்து மனம் வருந்திய நிறைநெஞ்சனும், சாதனாவும் தங்களால் இயன்ற உதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க நினைத்தனர். அதனைத் தொடர்ந்து தாங்கள் இருவரும் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக வழங்க அவர்கள் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமியை நேரில் சந்தித்த இக்குழந்தைகள், தங்கள் உண்டியல் சேமிப்பான ரூ. 7,200 ரூபாயை கஜா புயல் நிவாரண நிதிக்காக அளித்தனர்.
இந்த சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தங்கள் சேமிப்பை தர முன்வந்த நிறைநெஞ்சனையும், சாதனாவையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் பாராட்டினர்.