அதிமுக கூட்டணியில் நீடிக்கும் குழப்பம்.. கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை.. திருமாவளவன் பேட்டி!
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர்: அதிமுக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருவதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்றும், திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அரசின் பட்ஜெட் எதிர்பார்க்கும் அளவிற்கு சிறப்பான இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், தமிழ்நாட்டில் இதுவரை 71 தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கில் அதிமுக தனித்து போட்டி! செங்கோட்டையன் சொன்னதை கவனிச்சீங்களா! அப்போ பாஜக?ட்விஸ்ட்
திருமாவளவன் பேட்டி
தற்போது நடைபெற்று வரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 130க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதிமுக கூட்டணியிலும், அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது.
எதிரிகளே இல்லை
பாஜக தேர்தலில் போட்டியிடுவதா? அதிமுகவிற்கு ஆதரவளிப்பதா? அல்லது தேர்தலை தவிர்ப்பதா என உறுதியாக தெரியாத நிலையில் உள்ளது. பாமக தேர்தலில் இருந்து விலகி உள்ளது. இதன் மூலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார்.
வெறுப்பு அரசியல்
தொடர்ந்து பாஜக பற்றிய கேள்விக்கு, இந்தியாவை வல்லரசாக்குகிறோம் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சி, பணத்தின் வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை அதிகரித்து வருகிறது. நாட்டை வல்லரசாக்குவதற்கு பதிலாக மக்களிடையே ஜாதி மதத்தின் பெயரால் வெறுப்பை ஏற்படுத்தி மக்களுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்துவதே பாஜகவின் முக்கிய கடமையாக செய்து வருகிறது என்று விமர்சித்தார்.
பட்ஜெட் எதிர்பார்ப்பு
தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட் பற்றிய கேள்விக்கு, மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட் எதிர்பார்க்கும் அளவிற்கு சிறப்பான பட்ஜெட்டாக இருக்க வாய்ப்பில்லை. நாட்டில் பாஜகவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.