வந்த நாள் முதல் போதை! துப்பாக்கிச்சூடு நடத்திய அரியலூர் தேர்தல் பார்வையாளர்!
அரியலூர்: அரியலூரில் துப்பாக்கிச்சூடு நடத்திய போதை தேர்தல் பார்வையாளர், தேர்தல பணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்துக்கு தேர்தல் பார்வையாளராக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் கன்சன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கன்சன் ஹரியானாவில் ஐஜியாக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் பணிக்காக அரியலூருக்கு இவர் வந்துள்ளார். ஆனால் வந்த நாள் முதலே அவர் மது போதையில் இருந்ததாகவும், தேர்தல் பணியில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே அதிகாரிகள், ஹேமந்த் கன்சனிடம் தேர்தல் பணியில் உடனடியான ஈடுபடுங்கள் என பலமுறை வலியுறுத்தியும் இவர் கேட்காமல் மது போதையிலேயே இருந்துள்ளார்.
இதனிடையே இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில், தன் உதவியாளரிடம் துப்பாக்கியை வாங்கி, தான் தங்கியிருந்த சுற்றுலா மாளிகை அருகே வானத்தை நோக்கி 9 முறை சுட்டாராம். இது தொடர்பாக உதவியாளர் அளித்த புகாரை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, அரியலூர் எஸ்பி, பெரமபலூர் எஸ்பி உள்ளிட்ட உயர்அதிகாரிகள், போதை தேர்தல் பார்வையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே ஹேமந்த் தான் மதுபோதையில் இல்லை என்றும், துப்பாக்கி சரியாக செயல்படுதா என்பதை பார்க்கவே வானத்தை நோக்கி சுட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை தேர்தல் பணியில் இருந்து நீக்கியதோடு, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.