முதலமைச்சருக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கடிதம்... கொரோனா விவகாரத்தில் 9 கோரிக்கைகள் முன்வைப்பு
அரியலூர்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் கொரோனா விவகாரத்தில் அரசு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, 9 கோரிக்கைகளை முன் வைத்து முதல்வருக்கு ஓபன் லெட்டர் ஒன்று எழுதியுள்ளார்.
மருத்துவத்துறையில் உள்ள தனது நண்பர்கள் தன்னிடம் கூறியதை தொகுத்து இந்தக் கடிதத்தை தயார் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் சிவசங்கர் கூறியுள்ள விவரங்களும், கோரிக்கைகளும் பின் வருமாறு;
1.மருத்துவப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்தல் :
மருத்துவக் கல்லூரிகளிலுள்ள கொரோனா நோய் சிகிச்சைப் பிரிவுகளில் மட்டுமே கொரோனா பாதுகாப்புத் தனி நபர் கவசங்கள், உபகரணங்கள் உள்ளதென்றும், அதுவும் உலக சுகாதார நிறுவனம் கூறும் வரைமுறைகளின் படி, மருத்துவப் பணியாளர்களைத் தொற்றிலிருந்து முற்றிலும் காக்குமளவுக்குப் போதுமான வகையில் இல்லை என்றும் அறியப்படுகிறது.
50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நோயின் தாக்கம் மோசமாக இருக்கும் சூழ்நிலையில், கொரோனா வார்டுகளில் 50 வயதிற்கு மேற்பட்ட பேராசியர்கள், இணைப் பேராசியர்கள் ஆகியோரை முறையான பாதுகாப்புக் கவசங்களும் இல்லாமல் கட்டாயப் பணியில் ஈடுபடுத்துவது சரியாகாது.
2. கொரோனா களப் பணியாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதிகள் ஏற்படுத்துதல் :
கொரோனா களப்பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், வருவாய்த் துறையினர்,காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற களப் பணியாற்றுபவர்களுக்கு நோய்த் தொற்று வாய்ப்பு அதிகம் உள்ளதால் இவர்கள் வீடுகளுக்குச் செல்வதுமே அவர்களின் குடும்பத்தாருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். எனவே இவர்களுக்கு பணியிடங்களில், உணவு இருப்பிடம், பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் வேண்டும்.
3. நோயாளிகளை வகைப்படுத்தல்:
கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களையும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி வைக்கப் பட்டிருக்கும் தனிமைப் பிரிவுகளில், கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள் கலந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப் பட்டவர்களுடன் ஒரே பிரிவுகளில் கலக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். எனவே நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரை உடனடியாக அப்பகுதியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும்.
4.பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகப் படுத்துதல் :
இந்தியாவில் ஒருநாளைக்கு 7000 கொரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. தமிழகத்தில் ஒரு நாளைக்கு 350 பரிசோதனைகள் எனும் அளவில் தான் உள்ளது. நம்மிடம் 17 பரிசோதனை மையங்கள் உள்ளன. அவற்றுள் 6 மையங்ளே உறுதிப் படுத்தும் மையங்கள் (confirmatory centres).
எனவே தமிழகத்திலுள்ள எல்லா அரசுமருத்துவக் கல்லூரிகளிலும் பரிசோதனை மையங்களாக அமைத்திட வேண்டும்.தொற்று உள்ளதெனக் கண்டறிந்தால் அதை உறுதிப் படுத்தும் மையங்கள் (confirmatory centres) எண்ணிக்கையும் உயர்த்த வேண்டும். பரிசோதனை செய்யும் எண்ணிக்கையும் குறைந்தது ஒரு நாளைக்கு 1000 பரிசோதனை என்றாக்குதல் வேண்டும்.
5.வெளிப்படைத் தன்மை, சமூக நல்லிணக்கம் உறுதி செய்தல் :
பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை, நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, போன்றவற்றில் வெளிப்படைத் தன்மை வேண்டும். அதே சமயம் நோய்த் தொற்று இருப்பின் அவர்களின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் குடும்ப விபரங்களை துறைசார் பயன்பாட்டைத் தாண்டித் தேவையின்றிப் பொது வெளியில் செய்திகள், சமூக வலைதளங்களில் வெளியிடுதலைத் தடுக்க நடவடிக்கைகள் வேண்டும்.
மதம் சார்ந்த காழ்ப்புணர்ச்சிகள், சமூக நல்லிணக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் படியான செய்திகள், வலை பதிவுகளைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சமயத்தினரும் ஒற்றுமையாக மதம் மறந்து மனிதம் மட்டுமே நினைவில் நிறுத்தி இந்த இக்கட்டான சூழ்நிலையை சகோதரத்துவத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.
கொரோனா பட்டியலில் முதல்முறையாக கடலூர் மாவட்டம்.. 3 பேருக்கு பாதிப்பு
6.தயார் நிலையில் இருத்தல் :
மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்ததால் உடனுக்குடன் சரிசெய்யும் பொருட்டு அதிகமான எண்ணிக்கைகளில் பயோ மெக்கானிக்கல் இன்ஜினியர்கள், பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியர்கள் போன்றோர் பணியில் இருக்க வேண்டும். சிகிச்சைகளுக்கு எவ்விதத்திலும் தாமதம், தடை ஏற்படாத வண்ணம் தயார் நிலையில் இருக்க வேண்டும்
7. மருத்துவர்களின் கோரிக்கைகள்:
மக்கள் நலனுக்காய்ப் போராடிய அரசு மருத்துவர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் . நோய்த் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் துறையைச் (DPH) சேர்ந்த அரசு மருத்துவர்களின் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையால் பணி வரன்முறை செய்வதில் காலம் தாழ்த்தப் பட்டு, அம்மருத்துவர்கள் முதுநிலைக் கல்வியில் சேருவதில் தடை ஏற்பட்டுள்ளது. அத்துனை மன உளைச்சல்களுக்கும் மத்தியிலும் அவர்கள் கொரோனா தடுப்புப் பணியில் முழு வீச்சில் செயல் பட்டு வருகின்றனர்.
எனவே அரசு மருத்துவர்களின் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்து பணி வரன்முறை செய்து தந்து முதுநிலைக் கல்வியில் இடரின்றி சேர வழிவகை செய்ய வேண்டும்.போராட்டத்தில் பங்கேற்ற 120 அரசு மருத்துவர்களுக்கும் பணியிட மாற்றம் ரத்து செய்யப் பட்டு அவரவர்களின் முந்தைய பணியிடங்களுக்கே திரும்ப ஆவன செய்ய வேண்டும்.
8.கொரோனா களப்பணியாளர்களுக்கு ஊக்கமளித்தல் :
கொரோனா நோய்க் கட்டுப்பாட்டில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், இதரத் துறைப் பணியாளர்கள் பணியில் உயிரிழக்க நேர்ந்தால் அவர்கள் குடும்பத்திற்கு (corpus fund) இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் அரசு அறிவித்தல் வேண்டும். இவை அவர்களைத் தைரியமாக பணியை எதிர் கொள்ள ஊக்கமளிக்கும்.
9. வெளிப்படைத்தன்மை:
மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் MP/ MLA நிதியை கொரோனா நோயாளிகளுக்கும், கொரோனா சிகிச்சையில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்வதிலும் வெளிப்படையான முறையில் செலவிட வேண்டும். உதாரணத்திற்கு N95 மாஸ்க் கையிருப்பு இருக்கிறது என்றும், ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. உண்மை நிலை தெரியவில்லை.