இந்த வீடியோதான் சார் நிறைய பேர் பார்ப்பாங்க.. கை நிறைய காசு.. கூடவே ஃபேமஸ்.. அதிர வைத்த 4 இளைஞர்கள்
அரியலூர்: "ஸார்.. இந்த வீடியோவைதான் நிறைய பேர் பார்ப்பாங்க.. ஒரு பக்கம் ஃபேமஸ்.. இன்னொரு பக்கம் கை நிறைய காசு பார்க்கிறோம்" என்று கைதான 4 இளைஞர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டி மடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காடுகள் உள்ளன.
இந்த காடுகளில், மான், முயல், மயில், உடும்பு போன்ற விலங்குகள் உள்ளன.. இந்நிலையில், இந்த விலங்குகளை வேட்டையாடி.. அதனை சமைத்து சாப்பிடுவதுபோல்.. யூடியூப்களில் வீடியோக்கள் வெளிவந்தன.
இதை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ந்துவிட்டனர்.. இது சம்பந்தமாக மாவட்ட போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் புகார்களும் வரத் தொடங்கின. இதன்பேரில், உடையார்பாளையம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை காட்டுப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
யார் காட்டுக்குள் வருகிறார்கள், விலங்குகளை வேட்டையாடுகிறார்கள் என்று போலீசார் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போதுதான் 4 இளைஞர்கள் 2 பைக்கில் காட்டுக்குள் வந்தனர். அவர்களை அப்படியே லபக்கென பிடித்து கொண்டது வனத்துறை!
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, சுப்பிரமணியன், கார்த்திக், அலெக்ஸ் பாண்டியன், ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள்தான் இவ்வளவு நாளும், விலங்குகளை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிடுவது போல் போஸ் கொடுத்து, வீடியோ வெளியிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.
விலங்குகளை எப்படி வேட்டையாடுவது, அதை எப்படி சமைப்பது என வில்ஜேஜ் ஹண்டர் என்ற பெயரில் யூடியூப் கணக்கை தொடங்கி அதில்தான் இவர்கள் வீடியோ போட்டு வந்துள்ளனர். டிஸ்கவரி சேனலில் எப்படியெல்லாம் செய்கிறார்களோ, அப்படியேதான் இவர்களும் செய்துள்ளனராம்.. இதுவரை 25-க்கும் மேற்பட்ட விலங்குகளை வேட்டையாடி லட்சக்கணக்கில் சம்பாதித்தும் உள்ளனராம்.
இதை பற்றி கைதானவர்கள் சொல்லும்போது, "இந்த மாதிரி வீடியோக்களை போட்டால்தான் மக்கள் அதிகமாக விரும்பி பார்ப்பாங்க.. எங்களுக்கும் நிறைய பணம் கிடைக்கும்... நாங்களும் ஃபேமஸ் ஆகிவிடுவோம் என்கிறார்கள் 4 பேரும் அசால்ட்டாக! இவர்களிடம் 2 பைக், 4 செல்போன், கேமிரா, ஆப்பிள் லேப்டாப், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.