இது அப்பாவின் ஆசை.. அதன்படிதான் என் மாமாவை கட்டியுள்ளேன்.. காடுவெட்டி குரு மகள்
என் தந்தையின் விருப்பப்படிதான் திருமணம் நடந்தது என்று விருதாம்பிகை கூறியுள்ளார்.
அரியலூர்: "என் மாமாவுக்குத்தான் என்னை கல்யாணம் பண்ணி வெக்கணும்னு வீட்டில எப்பவோ முடிவான ஒன்னு, அதுவும் இல்லாம, என் அப்பா விருப்பப்படிதான் இந்த கல்யாணம் நடந்தது என்று காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்.
2 தினங்களுக்கு முன்பு காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தனது அத்தை மகனையே திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்டகாலமாகவே காதலித்து வந்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சொத்து தகராறு குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில்தான் இந்த திருமணம் நடந்தது. இந்த கல்யாணத்தில் காடுவெட்டி குருவின் மனைவி லதா கலந்து கொள்ளவில்லை.
அழுது புலம்பினார்
ஆனால் திருமணம் முடிந்ததும் ஒரு பக்கம் உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு கொடுங்கள் என்று மணக்கோலத்தில் தஞ்சை மகளிர் ஸ்டேஷனில் விருதாம்பிகை தஞ்சம் அடைந்தார். உடனே மறுபக்கம், என் மகளுக்கு கட்டாயம் கல்யாணம் நடந்துள்ளது என்று லதா செய்தியாளர்களிடம் அழுது புலம்பினார்.
மாமாவுடன்தான் கல்யாணம்
இந்நிலையில் இது சம்பந்தமாக விருதாம்பிகை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "இது எங்க சின்ன வயசிலிருந்தே முடிவான விஷயம்தான். என் மாமாவுக்குத்தான் என்னை கல்யாணம் பண்ணி வெக்கணும்னு வீட்டில எப்பவோ முடிவான ஒன்றுதான். இந்த விஷயம் எங்க அம்மாவுக்கும் தெரியும்.
பாதுகாப்பாக இருக்கிறோம்
ஆனால் அப்போதிருந்தே இந்த கல்யாணத்தில் எங்க அம்மாவுக்கு இஷ்டம் இல்லை. அதனாலதான் கல்யாணத்தை பத்தி அம்மாகிட்ட சொல்லவில்லை. இப்போதைக்கு நாங்கள் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாகத்தான் இருக்கோம்.
அத்தைகளுக்கு பிரச்சனை
ஆனால் ஊர்ல காடுவெட்டியில எங்க அத்தைங்களுக்குத்தான் சில பேர் பிரச்சனை கொடுத்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் நல்லா இருக்கும். மத்தபடி இந்த கல்யாணம் எங்க அப்பா ஆசைப்படிதான் நான் பண்ணியிருக்கேன்" என்றார்.