காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது.. 15 நாள் காவலில் சிறையில் அடைப்பு .. பதற்றம்
அரியலூர்: பாமக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை போலீசார் கைது செய்தனர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவராகவும், வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி ஜெ குரு. அவரது மறைவிற்கு பின் குருவின் மகன் கனலரசன் 'மாவீரன் மஞ்சள் படை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும், கனலரசன் நடத்தி வரும் 'மாவீரன் மஞ்சள் படை'யினருக்கும் மோதல் இருந்து வந்தது.
கொடி ஏற்ற முயற்சி
இந்நிலையில அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற தனது அமைப்பின் கொடியினை ஏற்ற தனது ஆதரவாளர்களுடன் ஜெயங்கொண்டம் வந்தார். அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்தாக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டத்தில் சிறை வைக்கப்பட்டார்.
பாமக புகார்
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மாவீரன் மஞ்சள் படை அமைப்பினருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் ஏற்பட்ட தகராறில் பாட்டாளி மக்கள் கட்சியினர் புகார் கொடுத்திருந்தனர்.
காடுவெட்டி குரு மகன்
இந்த புகாரின் பேரில் மாவீரன் மஞ்சள் படை தலைவரும் காடுவெட்டி குருவின் மகனுமான கனலரசன் ஜெயங்கொண்டத்தில் இன்று கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கனலரசனை செந்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பலத்த பாதுகாப்பு
இதையடுதது சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். காடுவெட்டி குருவின் மகன் கைது செய்யப்பட்டதால் செந்துறை நகரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்- இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.