மாவீரன் மஞ்சள் படை... காடுவெட்டி குரு மகன் புதிய அமைப்பு தொடக்கம்
அரியலூர்: மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்கிற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.
காடுவெட்டி குருவின் 59-வது பிறந்தநாளான நேற்று புதிய அமைப்பை தொடங்கிய அவரது மகன் கனலரசன் இளைஞர்களை பெருமளவில் ஈர்க்க தீவிரம் காட்டி வருகிறார்.
கல்லூரிப்படிப்பை முடித்த கனலரசன் பாமகவோடு இணைந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனியாக ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார்.
அதிமுக எம்பி சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
மாவீரன்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் அதீத நம்பிக்கைக்கும், பாசத்திற்கும் உரியவராக திகழ்ந்தவர் காடுவெட்டி குரு. அவரை தனது மூத்தமகன் என்றே ராமதாஸ் அழைப்பார். அந்தளவுக்கு குரு மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்தார் ராமதாஸ். இதேபோல் வன்னியர் குல இளைஞர்களால் மாவீரன் என்ற அடைமொழியோடு குரு அழைக்கப்பட்டார். இப்படி வன்னியர்சங்கத்திலும், பாமகவிலும் மிகப்பெரும் சக்தியாக இருந்த குரு கடந்த 2018-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
புகார்கள்
அதன் பின்னர் குருவின் குடும்பத்தினருக்கும், பாமக நிறுவனர் ராமதாசுக்கும் இடையே புகைச்சல் தொடங்கியது. குருவின் மருத்துவத்துக்கு ராமதாஸ் சரியாக உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை குரு தங்கை மீனாட்சி உள்ளிட்டோர் முன் வைத்தனர். மேலும், ராமதாஸுக்கு எதிராக குருவின் சகோதரிகளும், அம்மாவும் தொடர்ந்து கொந்தளித்தனர். இதனால் பாமகவுக்கும் குரு குடும்பத்திற்கும் இடையே சற்று இடைவெளி ஏற்பட்டது. அது நாளடைவில் விரிசலாகி இன்று புதிய அமைப்பை தொடங்கும் அளவுக்கு சென்றுள்ளது.
புதிய அமைப்பு
காடுவெட்டி குரு மகன் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து செயல்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மாவீரன் மஞ்சள் படை என்கிற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி அதிர்ச்சி அளித்துள்ளார். தான் தொடங்கிய அமைப்புக்கு ஆதரவு தரக்கோரி வன்னியர் சங்க தலைவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரையும் கடந்த ஒரு மாதமாக சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். இந்நிலையில் புதிய அமைப்பு தொடக்கவிழா நேற்று அரியலூர் மாவட்ட காடுவெட்டி கிராமத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது.
புகார்
மாவீரன் மஞ்சள் படை என்கிற பெயரில் புதிய அமைப்பு தொடங்குவதை பாமக தரப்பு ரசிக்கவில்லை என்றும், ஆளுங்கட்சி உதவியுடன் அவர்கள் தூண்டுதல் பேரில் 144 தடை போடப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் கனலரசன் ஆதரவாளர்கள். எவ்வளவு இடர்பாடுகள் கொடுத்தாலும் மாவீரன் மஞ்சள் படையை முடக்க முடியாது என்றும், அது மேலும் வலுப்பெறும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.