காப்பாத்துங்க சார்! காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த "காதல்" தம்பதி.. துரத்தி வந்த பெற்றோர்.. கலக்கம்!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, கோயிலில் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, பெற்றோர்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேந்தவர் நடராஜன். இவரது மகன் இளந்தமிழன் என்பவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் தங்கை ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், தனது தங்கை படித்து வரும் ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில், தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கௌத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் மகேஸ்வரி என்பவர், பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், ஆட்டோ ஓட்டுநர் இளந்தமிழனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கண்கலங்கிய முன்னாள் காதலி.. காதல் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மனைவி.. ஆந்திராவில் ஆச்சரியம்
பெண்ணின் பெற்றோர் மறுப்பு
இதனிடையே, தனது காதலியை கரம் பிடிப்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கௌத்தூர் பகுதியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டுக்குச் சென்று, அவரின் பெற்றோரிடம் இளந்தமிழன் பெண் கேட்டுள்ளார். அதற்கு மகேஸ்வரியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், இளந்தமிழன் - மகேஸ்வரி ஜோடி, தங்களது காதலை மேலும் தீவிரமாக வளர்த்துக்கொண்டு, நெருங்கி பழகி வந்துள்ளனர்.
கோயிலில் ரகசிய திருமணம்
இந்நிலையில், தனது காதலியை திருமணம் செய்ய இளந்தமிழன் முடிவு செய்தார். இதனையடுத்து, வழக்கமாக கல்லூரிக்கு வந்த காதலி மகேஸ்வரியிடம், காதலன் இளந்தமிழன் இதுகுறித்து பேசியுள்ளார். இதற்கு காதலி மகேஸ்வரியும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, காதலியை அழைத்து வந்து, உடையார்பாளையம் தெற்கு தெரு மாரியம்மன் கோயிலில் வைத்து, திருமணம் செய்து கொண்டார்.
காவல் நிலையத்தில் தஞ்சம்
இதனைத்தொடர்ந்து, இருவீட்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, ரகசியமாக திருமணம் செய்து கொண்டதால், பெற்றோரால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என இருவரும் நினைத்தனர். இதனையடுத்து, பெற்றோருக்குப் பயந்து, திருமணம் முடிந்த கையோடு, மாலையும், கழுத்துமாக புதுமணத் தம்பதிகள், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு தஞ்சமடைந்தனர்.
மணமகள் உறுதி
இதனையடுத்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, புதுமணத் தம்பதிகளிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். பின்னர், பெண்ணின் பெற்றோருக்கு திருமணம் குறித்து தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் காவல் நிலையத்திற்கு வந்த மகேஸ்வரியின் பெற்றோர், தனது மகளை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், அதற்கு மகேஸ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார். தனது காதல் காணவர் இளந்தமிழனோடுதான் செல்வேன் என்றும் மகேஸ்வரி உறுதியுடன் கூறியுள்ளார்.
மணமகனின் பெற்றோர்
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் மகேஸ்வரியின் பெற்றோர், அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர். இதனையடுத்து, மணமகன் இளந்தமிழனின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துள்ளனர். மணமகனின் பெற்றோருக்கு, மகளிர் போலீசார் அறிவுரைகள் கூறினர். பின்னர், காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை, மணமகனின் பெற்றோர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.