அரியலூரில் அன்று பலியான அனிதா... இன்று விக்னேஷ் - தொடர்கதையாகும் நீட் தற்கொலைகள்
டாக்டர் கனவில் இருந்த அரியலூர் அனிதாவை நீட் பலி கொண்டது போல இப்போது அதே மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்: மருத்துவர் ஆக வேண்டும் என கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. அரியலூர் அனிதாவிற்கு பிறகு ஆண்டுக்கு சில மாணவர்களை நீட் தேர்வு குறித்த அச்சம் உயிரை காவு வாங்கி வருகிறது. இப்போது அரியலூர் செந்துறையைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் நீட் தேர்வு குறித்த அச்சத்தினாலேயே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர, மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் கூடிய தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று சில அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளளது. நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மாணவர்களுக்கு மன உளைச்சலும் அதிகரித்து வருகிறது.
முதலியார் சமூகத்தை புறக்கணிக்கிறதா திமுக.. "அவர்களுக்கு" மட்டும்தான் பதவியா.. கிளம்பும் ஆதங்க குரல்
அனிதா தற்கொலை
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். நீட் தேர்வில் அவரால், 720க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மருத்துவராகும் கனவு தகர்ந்தநிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூரில் தொடரும் சோகம்
நீட் தேர்வு தோல்வியால் தமிழகத்தில் நிகழ்ந்த முதல் தற்கொலை அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது. நேற்று மீண்டும் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் விக்னேஷ் சிறுவயது முதலே டாக்டராக வேண்டும் என்ற கனவோடு படித்து வந்தார்.
நீட் பயிற்சி பெற்ற விக்னேஷ்
செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,006 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார் விக்னேஷ். டாக்டராக வேண்டும் என்ற ஆசையில் கேரளாவிலும், துறையூரில் ஒரு நிறுவனத்திலும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.
நீட் தேர்வுக்கு தீவிர பயிற்சி
இரண்டு முறை நீட் தேர்வு எழுதி ஒருமுறை தோல்வியும், ஒருமுறை தேர்ச்சி பெற்ற நிலையிலும் எம்பிபிஎஸ் படிக்க சீட் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 3வது முறையாக நீட் தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்தார்.
செப்டம்பர் 13ஆம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளதால் படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தினார்.
கிணற்றில் குதித்து தற்கொலை
இந்த நிலையில் இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டர் ஆக முடியுமா? என்று கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே சென்ற விக்னேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. மகனை காணாத பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விக்னேஷ் சடலம் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
கிணற்றில் இருந்து விக்னேஷ் உடலை உறவினர்கள் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நீட் தேர்வு குறித்து மனஉளைச்சலில் இருந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உறவினர்கள் போராட்டம்
மாணவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் பரவிய உடன் கிராம மக்களும், பாமகவினரும் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கிராமப்புற மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயிர் இழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீட் அச்சத்திற்கு பலியாகும் உயிர்கள்
நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் கடந்த ஆண்டு திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஸ்யா, விழுப்புரத்தை சேர்ந்த மோனிஷா உள்ளிட்ட மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வந்த ரவிச்சந்திரன் சுமதி தம்பதியரின் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அச்சத்தால் அரியலூர் அனிதா தொடங்கி விக்னேஷ் வரை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.