பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்
சென்னை: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர்.
இந்த நிலையில் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள வாக்குசாவடிகளை பாமகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டனர் என்றும் திமுக கூட்டணி கட்சிகள் புகார் வைத்து இருந்தது. 5க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளை பாமகவினர் கைப்பற்றி முறைகேடு செய்தனர் என்றும் திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டது.
விஜயகாந்த் அமெரிக்கா போறதா பேச்சு வந்ததே.. 4 தொகுதிகளில் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணி என்ன?
83 சதவீதம்
இதனால் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளது.
மறுவாக்குப் பதிவு
இது கள்ளஓட்டு போட்டது, வாக்குச் சாவடிகளை கைப்பற்றியதால் இருக்கலாம். எனவே பொன்பரப்பியில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார்.
கலவரம்
இதையடுத்து கலவரம் நடந்த இடங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் தன்னிடம் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து சத்யபிரதசாஹூ கூறுகையில் பொன்பரப்பியில் தேர்தல் நேரத்தில் கலவரம் நடக்கவில்லை.
மறுதேர்தல்
மாவட்ட ஆட்சியர் அறிக்கையின்படி பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இல்லை. எனவே பொன் பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை. மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவது குறித்து ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றார்.