காரு தமிழக அரசோடதுதான்.. ஆனா நம்பர் மட்டும் புதுச்சேரி.. என்னா தில்லுமுல்லு..!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் காரை பதிவு செய்துவிட்டு, தமிழக அரசின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து துறை வரி 1 சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி மட்டுமில்லாமல் ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா, கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் தொழிலதிபர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் விலை உயர்ந்த காரை வாங்கி புதுச்சேரியில் பதிவு செய்கின்றனர்.
இதற்காக கார் வாங்குவோர் புதுச்சேரியில் இருப்பது போன்ற ஆவணங்களும் உருவாக்கப்பட்டு, கார் பதிவாகும் விஐபி உரிமையாளர் புதுச்சேரியில் தங்கியிருக்க அவரது பெயரில் வாடகை வீடு பதிவாகும். அதையடுத்து பிரமாண பத்திரம் தயாரிக்கப்படும். மேலும் கூடுதல் ஆவணமாக சம்பந்தப்பட்டோர் பெயரில் புதுச்சேரி முகவரியுடன் கூடிய இன்சூரன்ஸ் ஒன்று புதிதாக எடுக்கப்படும்.
இம்முறை பல ஆண்டுகளாக நடக்கிறது. கார்கள் மட்டுமில்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகம் மட்டுமில்லாமல் வடமாநிலங்களிலும் புதுச்சேரி பதிவெண்ணுடன் இயங்கி வருகின்றன. இதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டுபுதுச்சேரியில் நடிகை அமலா பால் உயர் ரக பென்ஸ் எஸ் கிளாஸ் ரக காரை வாங்கினார். இதன் விலை ரூபாய் 1.15 கோடி. இந்த காரை அவரது சொந்த மாநிலமான கேரளத்தில் வாங்கியிருந்தால் அரசுக்கு ரூபாய் 23 லட்சம் வரை வரி கட்டியிருக்க வேண்டும்.
ஆனால் புதுச்சேரியில் 1 சதவீதம் மட்டும்தான் வரி என்பதால் ரூபாய் 1.15 லட்சம் வரை வரி கட்டிவிட்டு காரை எடுத்துச் சென்று நீண்ட நாட்களாக கேரளத்தில் பயன்படுத்தி வந்தார். இதனை கண்டுபிடித்த கேரள மாநில போக்குவரத்து போலீசார் நடிகை அமலாபால் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர். இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியே நேரடியாக தலையிட்டு போக்குவரத்து துறையில் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது அதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதுச்சேரி பதிவெண்கொண்ட வாகனம் ஒன்று அரசு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'PY-01-CS 6960' என புதுச்சேரி பதிவெண் உள்ள அந்த காரில் ஜெயங்கொண்டம் ஊராட்சி மன்ற தலைவர் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் முத்திரையும், அரசு வாகனங்களை குறிக்ககூடிய 'அ' என்ற எழுத்தும் உள்ளது. இதனை பார்க்கும் போது வேலியே பயிரை மேயலாமா என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் வாகனங்களை வாங்கி வந்து, தமிழகத்தில் பயன்படுத்தி வருவதால், தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் வாகனங்களை வாங்குவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
Recommended Video
புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்டுவதற்கு, புதுச்சேரியில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் காண்பிக்க வேண்டும். இல்லையென்றால் நுழைவு வரி செலுத்த வேண்டும் என விதி உள்ளது. ஆனால் இதனை பெரும்பாலும் யாரும் கடைபிடிப்பதில்லை. மேலும் போலி ஆவணங்கள் மூலம் வாகனங்கள் பதிவு செய்வது உறுதி செய்யப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் இடமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.