ஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்!
அரியலூர்: ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் டீக்கடையின் மேற்கூரை சரிந்து எண்ணெய் சட்டிக்குள் விழுந்ததில் எண்ணெய் தெறித்து ஊழியர் படுகாயமடைந்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்திலுள்ள முதல் கடையில் டீ கடை செயல்பட்டு வருகிறது.
இந்த டீக்கடை எப்பொழுதும் பயணிகள் நிற்கும் இடமாக பரபரப்பாக காணப்படும். இந்தக் கடையில் மாஸ்டராக பணிபுரிபவர் கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த குருநாதன். இவர் இன்று கடையில் உள்ளே வடை, பஜ்ஜி போட்டுக்கொண்டிருந்தார்.
சிமென்ட் காரைகள்
அப்போது திடீரென கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் பொலபொலவென பெயர்ந்து விழுந்தன. இதில் காரைகள் சூடாக இருந்த எண்ணெய் சட்டியில் விழுந்ததில் என்னை பல திசைகளில் தெறித்து குருநாதன் மீதும் விழுந்தது.
கொதிக்கும் எண்ணெய்
மேலும் மேலே இருந்து சிமெண்ட் காரைகள் விழுந்தன. இதில் எண்ணெய் உடல் மேல்பட்டு காயம் ஏற்பட்டதோடு சிமென்ட் காரை விழுந்ததில் தலையில் பலத்த காயமும் ஏற்பட்டு குருநாதன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பேருந்து நிலையம்
இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது. சில வருடங்களுக்கு முன்பாக இதே கடையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன. அப்போது யாரும் உள்ளே இல்லாததால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
பயணிகள் கோரிக்கை
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து கடைகளிலும் சேதமடைந்த பகுதிகளை கண்காணித்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும். உயிர் பலி வாங்கும் முன் இந்த பணிகளை செய்து முடிக்க வேண்டும் என பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.