வீட்டில் 6 பேர்.. ஆளுக்கு ஒரு கிப்ட்... மாரியம்மன் கோவிலுக்கு ஓடிய பச்சமுத்து.. அரியலூரில் பரபரப்பு
தேர்தல் பரிசு பொருட்களை திருப்பி வாக்காளர் ஒப்படைத்துள்ளார்
Recommended Video
அரியலூர்: பச்சமுத்து கிஃப்ட் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மாரியம்மன் கோயிலுக்கு ஓடியபோது.. யாருக்கும் எதுவுமே புரியவில்லை.. அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் மனிதர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழக்கவட்டாங்குறிச்சி.. இந்த ஊராட்சிதான் இப்போதைக்கு செம பிஸி!
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டி போடுகிறார்கள்.. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 பேர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32 பேர் என ஏகப்பட்டோர் களத்தில் உள்ளனர்.
வாக்கு
அதாவது இந்த ஒன்றியத்தில்தான் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். அதனால் வாக்கு சேகரிப்பும் விறுவிறுவென நடந்து வருகிறது. கூடவே, ஓட்டுக்கு பணம், கிஃப்ட்டுகளும் ஊரை வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், மேலக்கவட்டாங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் பச்சமுத்து.. 48 வயதாகிறது.. இவர் ஒரு டெயிலர்.. இவர் வீட்டில் மொத்தம் 6 பேர் உள்ளனர்!
பரிசு பொருட்கள்
ஒரு ஓட்டு என்றாலும் இப்போதைக்கு இந்த வேட்பாளர்களுக்கு மிக முக்கியமானதாயிற்றே.. லட்டு போல உள்ள 6 ஓட்டுக்களை அப்படியே விட்டுவிட முடியமா என்ன? அதற்காக வேட்பாளர்கள் குத்து விளக்கு, லட்சுமி விளக்கு, தட்டு, சீப்பு என ஏராளமான பரிசு பொருட்களை பச்சமுத்து வீட்டில் தந்துவிட்டு போயுள்ளனர்.
அம்மன் கோயில்
அப்போது பச்சமுத்து வீட்டில் இல்லை.. பிறகுதான் வேலை முடித்து வீட்டிற்குள் நுழைந்தால், பொருட்களை குவிந்து கிடந்திருக்கின்றன.. யார் யார் என்னென் பொருட்களை தந்தார்கள் என்று தெரியவில்லை.. அதனால் குழம்பி போன பச்சமுத்து, எல்லா பரிசு பொருட்களையும் தூக்கி கொண்டு அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்தார். கோயில் நடுவில் அந்த பொருட்களை போட்டுவிட்டு, அம்மனை கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு போய்விட்டார்.
பரபரப்பு
இதை பற்றி பச்சமுத்து சொல்லும்போது,"போட்டியிடறவங்க எல்லாருமே எனக்கு தெரிஞ்சவங்கதான்.. ரொம்ப பழக்கமும் கூட.. எனக்கு எந்த பரிசும் தராதீங்கன்னு சொல்லியும் வீட்டுல வந்து தந்துட்டு போயிருக்கிறாங்க.. இவ்வளவு பேரும் எனக்கு கிப்ட் தந்தாலும், என்னால ஒருத்தருக்குதான் ஓட்டு போட முடியும்.. அதனாலதான் கோயில்ல வந்து வெச்சுட்டேன்" என்றார். பச்சமுத்து கோயிலில் பரிசு பொருட்களை போட்டுவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது.