ஸ்டெர்லைட் ஆலை.. சிறப்பு சட்டம் கொண்டு வர அமீர் கோரிக்கை
தமிழக அரசுக்கு எதிராக சட்டம் இயற்ற அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று இயக்குனர் அமீர் வலியுறுத்தினார்.
மாணவி அனிதாவின் இறுதி அஞ்சலியின் போது தமிழக அரசை அவதூறாக பேசியதாக இயக்குனர் அமீர் மீது வழக்கு தொடரப்பட்டு, அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக அமீர் வந்திருந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் சொன்னதாவது:
அரசின் கைப்பாவை
ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய வார்த்தைகள் சர்வாதிகாரமான வார்த்தையாகும். இதில் தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாகவே செயல்படுகிறது.
பிரதமர் வரவில்லை
கஜா புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாமலேயே உள்ளது. இதனால் தான் இதுவரை புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடவில்லை.
மாநில சுயாட்சி
தமிழக அரசு கூறிய நிவாரணத் தொகையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. மத்திய அரசு சொல்வதை கேட்கும் அரசாகவே தமிழக அரசு உள்ளது. மாநில சுயாட்சி மறுக்கப்படுகிறது. மாநில சுயாட்சி கிடைக்கும் போதுதான் மாநிலத்திற்கான உரிமைகள் கிடைக்கும்.
சிறப்பு சட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்" என்றார்.