கோடையிலும் பசுமையாக காட்சியளிக்கும் கிராமம்.. வறட்சி ஏற்படாமல் லாவகமாக சமாளிக்கும் மக்கள்
ஜெயங்கொண்டம்: நாடு முழுவதும் கோடை வெயில் கொடூரமாக மக்களை வாட்டி வருகிறது. வழக்கம் போல இம்முறையும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஒருகிராமம் மட்டும் தண்ணீர் பற்றாகுறையின்றி கோடையை குதூகலமாக சமாளித்து வருகிறது.
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை கொட்டினாலும் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் கீழிறங்கி கொண்டே செல்கிறது. 300 முதல் 900 அடிக்கு ஆழ்துளை கிணறு அமைத்தால் தான் பல்வேறு இடங்களில் தண்ணீரையே பார்க்க முடிகிறது.
விவசாய மாவட்டங்களிலேயே இந்த நிலை என்றால், தொழில் நகரங்களின் நிலை பரிதாபமாக உள்ளது. காசு கொடுத்து குடிநீரை வாங்கி சமாளிக்க வேண்டியுள்ளது. மேலும் தண்ணீர் லாரிகளுக்காகவும் விடிய விடிய மக்கள் தூங்காமல் காத்திருக்கும் நிலை உள்ளது.
இப்படிப்பட்ட வறண்ட சூழலில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த புதுக்குடி என்ற கிராமம் இந்த தண்ணீர் பிரச்சனையை அற்புதமாக சமாளித்து வருகிறது. இந்த கிராம மக்கள் அனைவருமே வீட்டிற்கு வீடு கிணறுகள் அமைத்துள்ளனர்.
இதன் மூலம் தங்கள் தண்ணீர் தேவையை தங்கு தடையின்றி பூர்த்தி செய்து கொள்கின்றனர். புதுக்குடி கிராமவாசிகள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீர் முழுவதையுமே கிணறுகளின் மூலமே எடுத்து கொள்கின்றனர்.
வளைகுடாவுக்கு போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா.. ஈரானில் சூழும் போர் மேகம்! இந்தியாவிற்கும் தாக்கம்
ஆண்டு முழுவதும் கிணற்றில் தாங்கள் தண்ணீரை சேமித்து வைப்பதால் நீர் ஊறிக்கொண்டே இருப்பதாகவும் கோடைக் காலங்களிலும் கிணறுகளில் இருந்து தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதாகவும் பெருமிதத்துடன் கூறுகின்றனர் புதுக்குடிவாசிகள். இதுவரை தண்ணீரை விலை கொடுத்து வாங்கியதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
கிணற்று நீரைக் கொண்டு வாழை, எலுமிச்சை, கொய்யா என பல்வேறு வகையான பயிர்களை விவசாயம் செய்வதால் வறட்சி காலத்திலும் புதுக்குடி கிராமம் பசுமையாக காணப்படுகிறது.