70 வருஷமாக பாகிஸ்தான் செய்ததை நாலரை வருஷத்தில செஞ்சுட்டீங்க.. பாஜகவை சீண்டிய கெஜ்ரிவால்
Recommended Video
கொல்கத்தா: பாகிஸ்தான் 70 ஆண்டுகளில் நமக்கு செய்ததை இந்த நான்கரை ஆண்டுகளில் மோடியும், அமித் ஷாவும் மக்களுக்கு செய்துவிட்டனர் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பிரதமா் மோடி தலைமையிலா மத்திய பாஜகவுக்கு எதிரான மன நிலையில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. அதில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக மேற்கு வங்கம் மாநிலத்தில் இன்று எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பொதுக்கூட்டம் ஒன்றை கொல்கத்தாவில் அவர் நடத்தினார். கூட்டத்தில் ஸ்டாலின், தேவேகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால், மல்லி கார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
குழுமிய தலைவர்கள்
முன்னாள் மத்தியஅமைச்சர்கள், யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோரும் கலந்து கொண்டனர். ஹிர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி , சத்ருகன் சின்கா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் மத்தியில் உள்ள பாஜகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் உரையாற்றினர்.
கெஜ்ரிவால் உரை
கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:பாஜக ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாடு கண்டிராத மிக, மிக மோசமான ஆட்சி தற்போது நடைபெறுகிறது.
பாடம் புகட்டுங்கள்
மக்கள் விரோத அரசுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும். மோடியும், அமித்ஷாவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் நாட்டையே அழித்து விடுவார்கள்.
ஹிட்லர் செயல்பாடு
ஜெர்மனியில் ஹிட்லர் எதை செய்தாரோ அதையே தான் நமது நாட்டிலும் செய்வார்கள். 2019ம் ஆட்சியில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால்அரசியல் சட்டத்தை ஒழித்துக் கட்டுவார்கள்.
நாட்டை அழிப்பார்கள்
இனி வரும் காலங்களில் தேர்தலை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். ஒட்டுமொத்தமாக நாட்டையே அழித்து விடுவார்கள். பாகிஸ்தான் 70 ஆண்டுகளில் நமக்கு செய்ததை இந்த நான்கரை ஆண்டுகளில் மக்களுக்கு செய்துவிட்டனர்.
வேலையிழந்த 1 கோடி பேர்
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இளைஞர்கள் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீது பாஜக ஆட்சியில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என்று கெஜ்ரிவால் பேசினார்.