மாலை 6 மணி கெடு.. சபாநாயகரை அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திக்க வேண்டும்: உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
Recommended Video
பெங்களூர்: கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகரை நேரில் சந்தித்து, விரும்பினால், தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதில் சுமார் 11 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், எம்எல்ஏக்கள் பலரும் தன்னிடம் நேரில் ராஜினாமா கடிதங்களை வழங்கவில்லை என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார். அவர்கள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதனிடையே அதிருப்தி எம்எல்ஏக்களில் 10 பேர் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
செம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு
அதில், சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும், தங்களது ராஜினாமா கடிதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்க சபாநாயகருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.
இதுவரை 15 எம்எல்ஏக்கள் (உண்மையில் 16) தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், ஆனால் சபாநாயகர் இவர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் வாதாடினார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகரை அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து, விருப்பம் இருந்தால், தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுக்க வேண்டும். எம்எல்ஏக்களின் பாதுகாப்பை கர்நாடக டிஜிபி உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.
தற்போது, வழக்கு தொடுத்த 10 அதிருப்தி எம்எல்ஏக்களும் மும்பையில் உள்ளனர். அவர்கள் உடனடியாக கிளம்பி இன்று மாலை 6 மணிக்கு பெங்களூர் வருகை தந்தனர். சபாநாயகரிடம் புதிதாக ராஜினாமா கடிதத்தை நேரில் கொடுத்தனர். சபாநாயகரிடம் நேற்று தனது ராஜினாமா கடிதம் அளிக்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏ சுதாகர் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
எனவே அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜர் ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.