உச்சநீதிமன்றம் உத்தரவால் 'ஓடி' வந்த அதிருப்தி எம்எல்ஏக்கள்.. சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர்
Recommended Video
பெங்களூர்: கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும், சபாநாயகரை இன்று மாலை சந்தித்து, ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆனால், இவர்கள் யாரும் தன்னிடம் நேரில் ராஜினாமா கடிதங்களை கொடுக்கவில்லை என்று, சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். எனவே ராஜினாமா கடிதங்களை அவர் ஏற்கவில்லை.
இதையடுத்து, மும்பை ஹோட்டலில் தங்கியுள்ள 10 அதிருப்தி எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகரை அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து, விருப்பம் இருந்தால், தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுக்க வேண்டும். எம்எல்ஏக்களின் பாதுகாப்பை கர்நாடக டிஜிபி உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சிறப்பு விமானத்தில் மும்பையிலிருந்து பெங்களூர் திரும்பினார்கள் அதிருப்தி எம்எல்ஏக்கள். ஹெச்ஏஎல் விமான நிலையத்திலிருந்து அவர்கள் பஸ்சில் தலைமைச் செயலகம் வந்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட் கொடுத்த காலக்கெடுவான 6 மணிக்குள் அவர்களால் சபாநாயகர் அறைக்கு செல்ல முடியவில்லை.
6 மணி 3 நிமிடங்களுக்குதான், தலைமைச் செயலக வளாகத்திற்குள் பஸ் நுழைந்தது. இதையடுத்து, சபாநாயகர் எழுந்து சென்றுவிட்டால் சிக்கலாகிவிடுமே, உச்சநீதிமன்றம், உத்தரவிட்ட நேர அளவுக்குள் செல்ல முடியாவிட்டால் இதையே காரணமாக சபாநாயகர் சொல்லி, சட்ட ரீதியாக நமக்கு சிக்கலை ஏற்படுத்திவிடுவாரோ என்றெல்லாம் அஞ்சி நடுங்கினர் அதிருப்தி எம்எல்ஏக்கள்.
எனவே பஸ்சில் இருந்து இறங்கியதும், எம்எல்ஏக்கள் ஓட ஆரம்பித்தனர். மக்கள் பிரச்சினைக்காக இப்படி ஒருநாளும் ஓடியிராத எம்எல்ஏக்கள், பதவியை ராஜினாமா செய்ய இப்படி ஓடினர். ஒருவழியாக சில நிமிடங்கள் தாமதமாக சபாநாயகர் அறைக்கு அவர்கள் சென்று சேர்ந்தனர். இதன்பிறகு தங்கள் ராஜினாமா கடிதங்களை கைப்பட எழுதி சபாநாயகரிடம் அளித்தனர்.
நெருக்கடி ஏதுமின்றி நீங்கள் ராஜினாமா கடிதம் கொடுக்கிறீர்களா என அப்போது சபாநாயகர் ரமேஷ் குமார், அவர்களிடம் கேட்டறிந்தார். இந்த நடவடிக்கைகளை, சபாநாயகர் அலுவலகம் வீடியோவாக பதிவு செய்தது. சபாநாயகர் இந்த ராஜினாமா கடிதம் மீது எப்போது முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.