கர்நாடக சபாநாயகரின் புதிய ஆயுதத்தால் ராஜினாமா எம்எல்ஏக்கள் கலக்கம் . காங். கடும் எச்சரிக்கை
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் சமரசத்துக்கு உடன்பாடாவிட்டால் அவர்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை மூலம் பதவியை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு, பாஜகவின் பாதுகாப்புடன் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர்.
இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டால் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழும் . எனவே ஆட்சி கவிழ்ப்பை தடுக்க கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக மஜத- காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 13 பேர் வழங்கிய ராஜினாமா கடித்ததை நேற்று சபாநாயகர் ரமேஷ்குமார் பரிசீலனை செய்தார். அப்போது 8 பேரின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்தார். 5 பேரின் ராஜினாமா குறித்து நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி அறிவித்துள்ளார். இதன் மூலம் 13 பேரின் ராஜினாமாவும் ஏற்கப்படவில்லை.
வாழ்வோ சாவோ.. பதவியிலிருந்து விலகாதீர்கள்.. போராடுங்கள்.. ராகுல் காந்திக்கு ஒரு தொண்டனின் கோரிக்கை
இதன் காரணமாக மீண்டும் ராஜினமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து இன்று கடிதம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இந்த சூழலில் கூட்டணி ஒருங்கிணைப்பாளரான சித்தராமையா, ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமரசத்திற்கு உடன்படாவிட்டால், கட்சி தாவல் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். இதன் மூலம் அவர்களது எம்எல்ஏ பதவி பறிக்கப்படும். மேலும் 6 ஆண்டுகள் அவர்கள் எம்எல்ஏ பதவியில் போட்டியிட முடியாத நிலையையும் உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. சபாநாயகர் இந்த முடிவினை எடுத்தால் அது ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு சிக்கல் வரும் என்பதால் அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனினும் அப்படி செய்தால் ஆட்சி கவிழ்வதும் உறுதியாகிவிடும். இதனால் கடைசி ஆயுதமாகவே இந்த முயற்சியை காங்கிரஸ் மேற்கொள்ளும் என தெரிகிறது.