எடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு
பெங்களூர்: எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர் இதன் மூலம் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்றுவந்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது இதையடுத்து ஜூலை 26ஆம் தேதி எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது அன்றைய தினம் ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் எடியூரப்பா மட்டும் முதல்வராக பதவியேற்றார் இதன்பிறகு 29 ஆம் தேதி சட்டசபையில் அவர் பெரும்பான்மையை நிரூபித்தார்.
இதன் பிறகு சுமார் 20 நாட்களாக அமைச்சரவை விஸ்தரிப்பு செய்யப்படாமல் எடியூரப்பா மட்டுமே அமைச்சரவையின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார். அமைச்சர் பதவிக்கான போட்டியில் பலரும் இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
ஒரு வழியாக பாஜக தலைவர் அமித்ஷா ஒப்புதலைப் பெற்ற எடியூரப்பா ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று அமைச்சரவை விஸ்தரிப்பு நடைபெறும் என்று அறிவித்தார். இதன்படி இன்று காலை 10.30 மணி அளவில் பெங்களூரில் உள்ள ராஜ்பவனில் அமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மொத்தம் 17 சீனியர் பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
#Karnataka: KS Eshwarappa, takes oath as Karnataka Cabinet Minister, in Bengaluru. pic.twitter.com/989GupV0BR
— ANI (@ANI) August 20, 2019
ஜெகதீஷ் ஷெட்டர், கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆர்.அசோகா, கோவிந்த் கார்ஜோல், அஸ்வத் நாராயண், லக்ஷ்மன் சவதி, பி.ஸ்ரீராமுலு, எஸ்.சுரேஷ்குமார், வி.சோமண்ணா, சி.டி. ரவி, பசவராஜ் பொம்மை, கோட்டா சீனிவாஸ் பூஜாரி, ஜே.சி. மது சீமி, சி.சி. பாட்டீல், எச்.நாகேஷ், பிரபு சவுகான், சஷிகலா ஜொல்லே அன்னசாகேப் ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.
இதில் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் முதல்வர், முன்னாள் சபாநாயகர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என பல பதவிகளை அலங்கரித்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். எடியூரப்பாவை போலவே லிங்காயத்து ஜாதி பிரிவை சேர்ந்தவர். ஈஸ்வரப்பா மற்றும் அசோக் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி வகித்த அனுபவம் உள்ளவர்கள். ஈஸ்வரப்பா, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா போல குருபர் (யாதவர் ஜாதியின் ஒரு பிரிவு) ஜாதியை சேர்ந்தவர். அசோக், ஒக்கலிக (கவுடா) ஜாதிபிரிவை சேர்ந்தவராகும்.