முக்கிய நேரத்தில் போட்ட தப்புக் கணக்கு.. நாடு எப்பவுமே மறக்க முடியாத 2 குமாரசாமிகள்!
Recommended Video
பெங்களூர்: கர்நாடக வரலாற்றை இரு குமாரசாமிகளின் பெயர்களை தவிர்த்து விட்டு எழுதவே முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.
இரு குமாரசாமிகளுக்குமே பெயரில் மட்டுமல்ல, முக்கியமான கட்டத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளாலும், நிறைய ஒற்றுமை காண்பித்தவர்கள்.
அதில், ஒருவர் கர்நாடகாவின் தற்போதைய காபந்து முதல்வரான எச்டி குமாரசாமி. இன்னொருவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி குமாரசாமி. இருவரும் பிரபலமானது, முக்கியமான நேரத்தில் அவர்கள் போட்ட ஒரு தப்புக் கணக்கால்தான்.
ஹைகோர்ட் நீதிபதி
தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் 11-5-2015 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில் நீதிபதி முக்கியமாக ஜெயலலிதா மீது குற்றஞ்சாட்டியவாறு 66 கோடி ரூபாய் சொத்து சேர்க்கவில்லை, அந்தக் கணக்குத் தவறு என்பதைத் தான் குறிப்பாக எடுத்துக் காட்டி, நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புக்கு மாறான ஒரு தீர்ப்பை வழங்கினார்.
கணக்கு இதுதான்
நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, இந்தியன் வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெற்ற கடன் ரூ 1,50,00,000, குணபூசனியிடமிருந்து மாற்றப்பட்ட கடன் ரூ 3,75,00,000, ஜெயலலிதா பெற்றக் கடன் ரூ 90,00,000, ஜெ ரியல் எஸ்டேட் பெற்றக் கடன் ரூ 25,00,000, ஜெ.எஸ். ஹவுசிங் பெற்றக் கடன் ரூ 12,46,000, ஜெ. பார்ம் ஹவுஸ் பெற்றக் கடன் ரூ 50,00,000, சசிகலா பெற்றக் கடன் ரூ 25,00,000, வி.என். சுதாகரன் பெற்றக் கடன் ரூ 1,57,00,000, ராமராஜ் அக்ரோ மில்ஸ் பெற்றக் கடன் ரூ 1,65,00,000, மகாலட்சுமி திருமண மண்டபத்திற்காக கடன் ரூ 17,85,274 ஆக மொத்தம் ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
கருணாநிதி சொன்னதை பாருங்கள்
மேலே கண்ட பட்டியலில் உள்ள பத்து கடன்தொகையையும் கூட்டல் கணக்குத் தெரியாத யார் ஒருவரை விட்டுக் கூட்டச் சொன்னால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய் தான் வரும். ஆனால் கர்நாடக மாநில உயர் நீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையில் தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்கு தொடுத்தது தவறு என்றும் வியாக்ஞானம் செய்து, அவரை விடுதலை செய்திருக்கிறார்.
பரபரப்பு தீர்ப்பு
இதைப் போலவே தான் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட மாளிகையின் மதிப்பையும் சுதாகரன் திருமணச் செலவையும் மிகவும் குறைத்துக் காட்டியிருக்கிறார். அப்படிக் காட்டியதற்காக அடிப்படை எதையும் தீர்ப்பிலே அவர் விவாதிக்கவில்லை. தன்னிச்சையாகவே ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகளையெல்லாம் குறைத்துக் காட்டியிருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது. இப்படி சொல்லியிருந்தார் கருணாநிதி. மேலும், குமாரசாமி கணக்கு, குமாரசாமி கால்குலேட்டர் என்றெல்லாம் அப்போது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பறந்தன. ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை மாற்றிய உச்சநீதிமன்றம், குன்ஹா தீர்ப்பு சரிதான் என கூறியது குறிப்பிடத்தக்கது. குமாரசாமியும் அப்புறம் ஓய்வு பெற்றுவிட்டார்.
இப்போதும் ஒரு தப்புக் கணக்கு
தப்புக்கணக்கால் ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி குமாரசாமி இந்தியா முழுக்க ஃபேமஸ் ஆனதைபோல, இப்போது எச்.டி.குமாரசாமியும் ஃபேமஸ் ஆகியுள்ளார். இந்த குமாரசாமியும் முக்கியமான நேரத்தில் தப்புக் கணக்கு போட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 16ஐ தொட்ட நிலையில், திடீரென நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு தான் தயாராக இருப்பதாக.., யாருமே கேட்காமல்.. ஏன் எடியூரப்பாவே கேட்காமல் தானாக முன்வந்து சொல்லிவிட்டார் குமாரசாமி.
முதல்வர் பேச்சு
சட்டசபையில் அன்று அவரது நாக்கில் இருந்து இப்படி ஒரு வார்த்தையை உச்சரிக்க சொல்லியது, அனேகமாக எடியூரப்பாவின் குலதெய்வமாகதான் இருக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்எல்ஏக்களை கொறடா உத்தரவு பிறப்பித்து தகுதி நீக்கம் செய்யலாம் என்பதால், அதை சொல்லி பயம் காட்டியே ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து விடலாம் என்பது தான் குமாரசாமி போட்ட கணக்கு. ஆனால் அங்குதான் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது.
தப்பாகிப்போனதே
அதிருப்தி எம்எல்ஏக்கள் முந்திக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்கள் ராஜினாமா கடிதங்களை உடனடியாக சபாநாயகர் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி சட்டசபை அழைத்துச் செல்லக்கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. அங்குதான் ஆரம்பித்தது குமாரசாமிக்கு பெரிய பின்னடைவு. குமாரசாமி போட்ட கணக்கு அத்தனையும் தப்புக் கணக்காகி போனது. தானாக வாயைக் கொடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியதோடு, உச்சநீதிமன்ற உத்தரவால் தங்கள் எம்எல்ஏக்களை வர வைக்க முடியாமல் போனதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. ஆகமொத்தம் முக்கியமான கட்டத்தில் தப்புக் கணக்குப் போட்ட இரு குமாரசாமிகளும், நாடு முழுக்க விவாத பொருளாக மாறியது மட்டும் உண்மை.