வாடிக்கையாளர்களின் 2000 கோடி அபேஸ், காங். எம்எல்ஏவிடம் 400 கோடி? பெங்களூரை உலுக்கும் மெகா நிதி மோசடி
பெங்களூர்: பெங்களூரில், முதலீட்டாளர்களிடம் 2000 கோடி ரூபாய் திரட்டிய நகைக்கடை மற்றும் நிதி நிறுவன அதிபர் தலைமறைவாகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ சுமார் 400 கோடியை மோசடி செய்து விட்டதாக அவர் வாட்ஸ்அப்பில் பரபரப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
பெங்களூர் நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்று சிவாஜி நகர். இங்கு இயங்கி வருகிறது 'ஐ மோனிட்டரி அட்வைசரி' (IMA) என்ற நிதி நிறுவனம்.
இதன் உரிமையாளர் பெயர் முகமது மன்சூர் கான். இவர் வெளியிட்ட வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று, அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.
சிவாஜி நகர் எம்எல்ஏ
முகமது மன்சூர் கான் வெளியிட்ட அந்த ஆடியோவில், சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ரோஷன் பெய்க், தன்னிடம் 400 கோடி ரூபாய் பெற்றதாகவும், இதேபோல, பல்வேறு அதிகாரிகளுக்கும் லஞ்ச பணம் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மன்சூர் கான். 400 கோடி ரூபாயை ரோஷன் பெய்க் திருப்பி தரவில்லை என்றும், தனது அலுவலகத்திற்கு ரவுடிகள் வந்து மிரட்டுவதாகவும் மன்சூர் கான் குற்றம்சாட்டி உள்ளார்.
முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்
மேலும், தற்போது தெற்கு பெங்களூரில் ஒரு பகுதியில் இருப்பதாகவும், இந்த ஆடியோவை நீங்கள் கேட்பதற்கு நான் தற்கொலை செய்து கொண்டு இருப்பேன் என்றும் அதில் பரபரப்பாக தெரிவித்துள்ளார் மன்சூர் கான். இந்த ஆடியோ கிடைக்கப்பெற்றதும், ஐஎம்ஏ, நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். நூற்றுக்கணக்கன வாடிக்கையாளர்கள், சிவாஜி நகரில் உள்ள, ஐஎம்ஏ நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு தங்கள் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு போராட்டத்தை நடத்தினர்.
அதிக வட்டி
2006 ஆம் ஆண்டு ஐஎம்ஏ நிறுவனம் தொடங்கப்பட்டது. இஸ்லாமிக் பேங்க் மற்றும் ஹலால் முதலீட்டு நிறுவனம் என இது அழைக்கப்பட்டது. முதலீடுகளின் மீது 14 முதல் 18 சதவீதம் அளவுக்கு வட்டித் தொகை தருவதாக உறுதி அளித்திருந்தது ஐஎம்ஏ நிறுவனம். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர், இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளராக சேர்ந்தனர். சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீடுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து, பெற்றுள்ளது இந்த நிறுவனம். இதில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆகும்.
பிற துறைகளில் முதலீடு
இந்த முதலீட்டை, நகைக்கடை, ரியல் எஸ்டேட், உலோக மார்க்கெட், பார்மசி, கல்வி மற்றும் சுகாதார துறைகளில் திருப்பி விட்டுள்ளார் மன்சூர் கான். இதனிடையில் மன்சூர் கானின் கட்டுமானத் தொழில் கூட்டாளி, முகமது காலித் அகமது என்பவர், கமர்ஷியல் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் 1.3 கோடி ரூபாயை மன்சூர் கான் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். இந்த புகார் பதிவு செய்யப்பட்ட பிறகுதான், மன்சூர் கான் திடீரென தலைமறைவாகினார். பிறகு, இதுபோன்ற ஆடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தப்பியோட்டம்?
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மன்சூர் கான், ஐக்கிய அரபு எமிரேட் தப்பி ஓடி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறார்கள். வாடிக்கையாளர்களையும், போலீசாரையும் குழப்புவதற்காக இவ்வாறு ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்க வேண்டும் என்று சந்தேகப்படுகின்றனர், காவல்துறையினர். இதனிடையே எம்எல்ஏ ரோஷன் பெய்க், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த ஒரு நிதி பரிவர்த்தனை தொடர்பும் கிடையாது என்றும், காங்கிரஸ் கட்சிக்குள் தனக்கு பிடிக்காதவர்கள் இதுபோன்ற வதந்தியை கிளப்பி விட்டு மக்களிடையே தனது மதிப்பை குறைப்பதற்கு முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்எல்ஏ விளக்கம்
இந்த நிறுவனம், தனது சிவாஜி நகர் தொகுதியில் மக்கள் நலப் பணிகள் பலவற்றை மேற்கொண்டதாகவும், அவ்வாறுதான் அந்த நிறுவனத்தோடு பழக்கம் இருந்ததாகவும், பல்வேறு நிறுவனங்களும் இது போல சமூகத் தொண்டாற்ற வருவது வழக்கம் என்றும் ரோஷன் பெய்க் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின், முதலீடு திரும்ப கிடைக்குமா? மன்சூர் கான் என்ன ஆனார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறையின் விசாரணையில் தான் விடை கிடைக்கும்.