பெங்களூரில் 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்.. தலைநகரில் வெற்றி யாருக்கு? தாறுமாறு எதிர்பார்ப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெங்களூரில், உள்ள சிவாஜிநகர், கே.ஆர்.புரா, யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட் ஆகிய 4 தொகுதிகளும் அடங்கும்.
பெங்களூர் மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பொதுவாக, தலைநகர், பெங்களூரில் எந்த கட்சி அதிக தொகுதிகளை வெல்கிறதோ, அந்த கட்சிதான், மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும்.
2013ம் ஆண்டு பொதுத் தேர்தலில், பெங்களூரில் 14 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. அப்போது சித்தராமையா தலைமையில் அறுதி பெரும்பான்மையோடு, காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. பாஜக 12 தொகுதிகளை வென்று பிரதான எதிர்க்கட்சியானது. மதசார்பற்ற ஜனதாதளம் 2 தொகுதிகளை வென்றது.
பெங்களூர் முக்கியம்
2008ம் ஆண்டு பெங்களூரில், பாஜக 17 தொகுதிகளை வென்றது. அப்போது, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. பாஜக ஆட்சியமைத்தது அதுதான் முதல் முறையும்கூட. அதேநேரம், 2018ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பெங்களூரில், 11 தொகுதிகளைத்தான் பாஜகவால் வெல்ல முடிந்தது. அறுதி பெரும்பான்மையை அக்கட்சி எட்ட முடியாததால், காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.
பழமையான சிவாஜிநகர்
இப்போது தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகள் வரலாறு யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை பார்க்கலாமா? முதலில் பழமையான சிவாஜிநகர் தொகுதியை பார்க்கலாம். மொத்தம் 12 தேர்தல்களை இந்த தொகுதி பார்த்துள்ளது. உருது பேசும் முஸ்லீம்கள் மற்றும் தமிழர்கள் கணிசமாக உள்ள இந்த தொகுதியில், இருமுறை மட்டும் பாஜக வென்றுள்ளது. 2008 முதல் ரோஷன் பெய்க் 3 முறை தொடர்ச்சியாக வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய மூத்த தலைவரான இவருக்கு தொகுதிக்குள் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளதும் இதற்கு காரணம்.
ஒதுங்கிய ரோஷன் பெய்க்
குமாரசாமி தலைமையிலான, காங்கிரஸ்-மஜத ஆட்சியில் இவருக்கு அமைச்சர் பதவி தரவில்லை. எனவே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக சபாநாயகரால் தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது. உச்சநீதிமன்றமே, இடைத் தேர்தலில் தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள், போட்டியிடலாம் என கூறியுள்ளபோதிலும், ரோஷன் பெய்க் இத் தேர்தலில் களமிறங்கவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்ஷத், ம.ஜ.த சார்பில் தன்வீர் அகமது, பாஜக சார்பில் சரவணா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். முஸ்லீம்கள் வாக்குகளை காங்கிரசும், ம.ஜ.தவும் பகிர்ந்து கொள்ளும் எனவே பிற வாக்குகளை வைத்து, தாங்கள் வெல்லலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால், பொதுவாக இங்கு இப்படி வரலாறு கிடையாது. வாக்குகள் சிதறினாலும், வலிமையான வேட்பாளரே வெல்வது வழக்கம்.
கே.ஆர்.புரம் தொகுதி
கே.ஆர்.புரம் சட்டசபை தொகுதி 2008ல்தான் உருவானது. தெலுங்கர்கள் அதிகமாக வசிக்கும் இந்த தொகுதியில், பாஜகவின் நந்தீஷ் ரெட்டி முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் மக்களிடம் எளிமையாக பழகாத இவரது குணம், அடுத்ததடுத்த தேர்தல்களில் தோல்வியை பரிசாக அளித்தது. 2013ம் ஆண்டு தேர்தலிலும், 2018 தேர்தலிலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பைரத்தி பசவராஜ் இங்கு வெற்றி பெற்றார்.
தனிப்பட்ட செல்வாக்கு
அதிருப்தி எம்எல்ஏவாக மாறிய இவர் தகுதி நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் சேர்ந்து இப்போது பாஜக சார்பில் அதே, கே.ஆர்.புரம் தொகுதியில் களமிறங்கியுள்ளார். ம.ஜ.த சார்பில் கிருஷ்ணமூர்த்தியும், காங்கிரஸ் சார்பில் நாராயணசாமியும் போட்டியிடுகிறார்கள். பைரத்தி பசவராஜின் தனிப்பட்ட செல்வாக்கு பலம் என்றாலும், அதிருப்தி எம்எல்ஏவாக மாறி இடைத் தேர்தலுக்கு காரணமானவர்களில் ஒருவர் என்பது பலவீனம்.
மகாலட்சுமி லேஅவுட் எப்படி?
2008 தொகுதி மறுசீரமைப்பின்போது உருவான மற்றொரு புதிய தொகுதி மகாலட்சுமி லேஅவுட். ஒக்கலிகர்கள், லிங்காயத்துகள் தவிர்த்து ஓரளவு தமிழ் வாக்காளர்களையும் கொண்ட தொகுதி. ராஜாஜிநகரிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் 2008ல், காங்கிரஸ் சார்பில் நரேந்திர பாபு வெற்றி பெற்றார். 2013ல் அப்போதைய துணை மேயர் ஹரீஷ் பாஜக சார்பிலும், நரேந்திர பாபு காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டனர். இவர்கள் போட்டியால் ஓட்டு சிதற, ம.ஜ.த சார்பில் போட்டியிட்ட கோபாலய்யா வெற்றி பெற்றார். இதன்பிறகு தொகுதியில் படுவேகமாக தனது செல்வாக்கை வலுப்படுத்திய கோபாலய்யா, தொகுதிக்கு உட்பட்ட 7 வார்டுகளிலும், ம.ஜ.த கவுன்சிலர்கள் வெல்ல காரணமாகினார். 2018லும் இவரே வென்றார். இப்போது கட்சி தாவி, பாஜக சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சிவராஜ், மஜத சார்பில் கிரிஷ் கே.நாஷி போட்டியிடுகிறார். கோபாலய்யா ஒக்கலிகர், கிரிஷ் கே.நாஷி, லிங்காயத்து ஜாதிக்காரர்.
ம.ஜ.த பலம்
2008ல் உருவாக்கப்பட்ட யஷ்வந்த்பூர் அதன் முக்கியமான ரயில் நிலையத்தால் அகில இந்திய அளவில் பெயர் பெற்ற தொகுதி. பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திற்கு பிறகு, பெரிய ரயில் நிலையம் யஷ்வந்த்பூரில்தான் உள்ளது. முதல் தேர்தலில் பாஜகவின் ஷோபா கரந்தலாஜே வெற்றி பெற்றார். 2013 மற்றும் 2018ல் காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.சோமசேகர் வெற்றி பெற்றார். மஜத 2வது இடம் பிடித்து அசத்தியது. பாஜகவுக்கு 3வது இடம்தான் கிடைத்தது. இம்முறை சோமசேகர் கட்சி தாவி பாஜக சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் நாகராஜும், மஜத சார்பில், கடந்த பொதுத் தேர்தலில் களம் கண்ட அதே ஜவராயி கவுடாவும் களம் காண்கிறார்கள். ஜவராயி கவுடா பணக்கார வேட்பாளர்களில் ஒருவர். இவர் சொத்து மதிப்பு ரூ.270 கோடி. கடந்த தேர்தலில் விட்டதை இம்முறை இவர் பிடித்து சோமசேகரை தோற்கடிக்க உறுதிபூண்டுள்ளார்.