கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு செக்? 400 காங். நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு
டெல்லி: இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் 400 பேர் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஒரு வழக்கு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில், ராஜினாமா செய்த 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஒரு வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும், ராஜினாமா கடிதங்களை ஏற்க, சபாநாயகருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.
என்ன சொல்லப்போகிறது உச்சநீதிமன்றம்.. கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கு இன்று மீண்டும் விசாரணை
இதையடுத்து நேற்று மாலைக்குள் சபாநாயகரிடம் நேரில் ராஜினாமா கடிதத்தை கொடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையேற்று அந்த எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதங்களை நேரில் கொடுத்தனர். பிறகு மும்பையிலுள்ள ஹோட்டலுக்கே திரும்பினர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில், இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் 400 பேர் சேர்ந்து, இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது "கட்சியிலிருந்து தாவியதற்கு சமம்" என்று தங்கள் மனுவில் அவர்கள் கூறியுள்ளனர், எனவே அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளனர். இந்த விவகாரம் தலைமை நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது.