வாங்க.. ஓட்டலுக்கு போகலாம்.. அம்மா, அப்பா, மனைவி, குழந்தையுடன்.. நாகராஜ் எடுத்த கோர முடிவு
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்
பெங்களூரு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் 5 பேர் உடலிலும் குண்டு பாய்ந்து உள்ளதால், இது தற்கொலையா, கொலையா என்றே தெரியவில்லை.
கர்நாடக மாநிலத்தின் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். 36 வயதாகிறது. இவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தவர்.
இவரது தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா ஜாதகம் பார்க்கும் தொழில் செய்பவர். இவருக்கு கல்யாணம் ஆகி நிகிதா என்ற மனைவியும் ஆர்ய கிருஷ்ணா என்ற மகனும் உள்ளனர். நிகிதாவுக்கு வயசு 28, குழந்தைக்கு வயது 4!
இந்நிலையில் ஓம் பிரகாஷ், தனது அப்பா, அம்மா, மனைவி, குழந்தையுடன் மைசூர் - ஊட்டி சாலையில் குண்டுலு பேட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து அங்கேயே ரூம் எடுத்து தங்கி உள்ளார். ஆனால் இன்று விடிகாலை ஹோட்டல் ரூமில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளி அருகே 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்த போது 5 பேருமே உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். இவர்களுக்கு அருகிலேயே துப்பாக்கி ஒன்றும் கிடந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஓம்பிரகாஷ் 4 பேரையும் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் தொழில் பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனை காரணமாகவே இந்த கொலைகள் அல்லது தற்கொலைகள் நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.