செயலிழந்த ஒரு கால்.. ரயில் தண்டவாளத்தில் பெரிய விரிசல்.. 6 கிமீ ஓடி பலரின் உயிரை காப்பாற்றிய நபர்!
ஒரு கால் செயலிழந்த மாற்று திறனாளி ஒருவர் கர்நாடக மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூர்: ஒரு கால் செயலிழந்த மாற்று திறனாளி ஒருவர் கர்நாடக மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கோரங்கராபாதி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா பூஜாரி. இவருக்கு 56 வயதாகிறது.
கடந்த வருடம் இவருக்கு நரம்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக ஒரு கால் செயலிழந்து இருக்கிறது. அதன்பின் சிகிச்சை பெற்ற இவர் வாக்கிங் ஸ்டிக்குடன் நடக்க பழகி உள்ளார்.
நடைப்பயிற்சி
இந்த நிலையில் கோரங்கராபாதி அருகாமையில் உள்ள ஊரான பிரமாஸ்தனாவில்தான் இவர் எப்போதும் நடை பயிற்சி செய்வார். அங்கிருக்கும் ரயில்வே பாதையில் வெறும் காலில் நடப்பது நல்லது என்று மருத்துவர் கூறியதால் அங்கு நடப்பது வழக்கம். ரயில் பாதை கற்களில் வெறும் காலில் நடந்து பழகி வருகிறார்.
பிரச்சனை
இந்த நிலையில் நேற்று அவர் அப்படி நடக்கும் சமயத்தில், ரயில்வே தண்டவாளத்தில் பெரிய விரிசலை பார்த்துள்ளார். டிராக்கில் இருந்த விரிசலை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்ய அங்கு யாருமே இல்லை. கையில் போன் கூட இல்லாமல் அங்கு அவர் வந்துள்ளார்.
வேகமாக ஓடினார்
இதையடுத்து தானாக களமிறங்க முடிவெடுத்த அவர், வேகமாக ரயில் பாதையிலேயே நடந்துள்ளார். கால்கள் வலிக்க வலிக்க செயலிழந்த ஒரு காலுடன் வேகமாக நடந்துள்ளார். 6 கிலோ மீட்டர் தூரம் இப்படியே நடந்து சென்று இருக்கிறார். வெறும் 20 நிமிடத்தில் நடந்து அவர் அருகேயுள்ள ரயில் நிலையத்திற்கு சென்றார்.
சூப்பர் பாஸ்
அங்கிருந்த அதிகாரிகள் அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது தண்டவாளம் மேலும் விரிசல் அடைந்து இருந்துள்ளது. இதையடுத்து வேகமாக தண்டவாளத்தை சரி செய்யும் பணி தொடங்கி உள்ளது.
பாராட்டு
சரியாக தண்டவாளத்தை சரி செய்த 30 நிமிடத்தில் கோவாவில் இருந்து உடுப்பி வந்த ரயில் அங்கு வந்துள்ளது. அதில் ஆயிரக்கணக்கான பயணிகள் இருந்துள்ளனர். கிருஷ்ணா பூஜாரி மட்டும் வேகமாக ஓடி இந்த செய்தியை தெரிவிக்கவில்லை என்றால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்கிறார்கள். இவருக்கு அம்மாநில அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.