பெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்
பெங்களூர்: ஓசூர் - பெங்களூர் இடையே, 6 வழித்தட அதிவிரைவுச் சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள், விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
STRR திட்டம் என சுருங்க அழைக்கப்படும் சாட்டிலைட் நகர வட்ட சாலை திட்டத்தின் கீழ், ஓசூரிலிருந்து ஆனேக்கல், ராம்நகர், மாகடி வழியாக பெங்களூருக்கு 6 வழி அதிவிரைவுச் சாலை அமையவிருக்கிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை 948A என பெயரிடப்பட்டுள்ளது.
3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், 4 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும். சாலையின் மொத்த நீளம் 180 கிலோ மீட்டர் ஆகும்.
டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக!
6 வழி அதிவிரைவுச் சாலை
கர்நாடக மாநிலத்தில் 135 கிலோ மீட்டர் அளவிற்கும், ஓசூர் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் அளவிற்கும், அமைகிறது. ஓசூர் பகுதியில் அமைய உள்ள 6 வழிச்சாலைக்காக, 400 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 6 வழி அதிவிரைவுச் சாலையில், வாகனங்கள் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்து செல்லலாம்.
போக்குவரத்து நெரிசல் குறையும்
இத்திட்டத்தின் மூலம், பெங்களூர் மற்றும் ஓசூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் முற்றாக குறைய வாய்ப்புள்ளது. பெங்களூர் -ஓசூர் 6 வழிச் அதிவிரைவுச் சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்காக, ஓசூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய வட்டார தகவல்கள் கூறுகின்றன.
நான்கு வழிச்சாலை
இதற்கிடையல் ஓசூரில் இருந்து பாகலூர் செல்லும் மாநில அரசின் தேசிய நெடுஞ்சாலை, கர்நாடக மாநில எல்லை வரை நீள்கிறது. ஓசூரில் துவங்கி, திருமலை திருப்பதி திருமண மண்டபம் வரை, 2 கி.மீ., தூர சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ளது. 13 கோடியே, 84 லட்சத்து, 97 ஆயிரம் ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலை மற்றும் மழைநீர் வடிகால், நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
இதனால் சாலையோர மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. சாலை விரிவாக்க பணிக்காக, நெடுஞ்சாலைத்துறையினர் பழமையான மரங்களை வெட்டி அகற்றுவதை கண்டித்து, இ.கம்யூ., கட்சியினர், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா தலைமையில், சில தினங்களுக்கு முன்பு பாகலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.