சோதனை மேல் சோதனை! பெங்களூருவில் கொரோனா குவாரண்டைன் ஹோட்டல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது!
பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரிசோதனைக்குட்படுத்திக் கொண்டவர்கள் தனிமைப்படுத்தி தங்கி இருந்த ஹோட்டல் குளியலறையின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூரு திரும்பியவர்கள் தனிமைப்படுத்துதலுக்காக ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டல்களுக்கான பில் தொகையையும் அவர்களே செலுத்தி வருகின்றனர்.
பெங்களூருவை சேர்ந்த மீனாட்சி வெங்கட்ராமன் குடும்பத்தினரும் இதேபோல் வெளி மாநிலத்தில் இருந்து பெங்களூரு திரும்பினர். இதனால் பெங்களூரு மெஜஸ்டிக் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த ஹோட்டலில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான வாடகை ரூ1,200.
பெங்களூரில் எழுந்த பயங்கர சப்தம்.. காரணம் என்ன?.. ஆதாரங்களுடன் வெளியிட்ட வெதர்மேன்
பெங்களூரு ஹோட்டல்
இந்த அறைக்கு மீனாட்சி வெங்கட்ராமன் குடும்பம் தங்கிய நாள் முதலே பிரச்சனைக்கு மேல் பிரச்சனை. திடீரென ஒரு நாள் மின்விசிறி வேலை செய்யவில்லை. இதனால் மீனாட்சி குடும்பத்தினர் படாதபாடுபட்டுவினராம். ஹோட்டல் நிர்வாகம் இதை சரி செய்வதற்கு கூட ரொம்பவே அலட்சியம் காட்டியதாம். இதேபோல் ஹோட்டல் நிர்வாகத்துடன் ஒவ்வொரு விவகாரத்துக்கும் மீனாட்சி குடும்பம் போராடிக் கொண்டிருந்தது.
இடிந்து விழுந்த மேற்கூரை
இந்நிலையில்தான் இன்னொரு சோதனை அந்த அறையிலேயே நிகழ்ந்திருக்கிறது. மீனாட்சி குளியலறையில் இருந்த போது மேற்கூரையில் இருந்து ஏதோ விழும் சப்தம் கேட்டிருக்கிறது. இதனால் குளியல் அறையில் இருந்து அவர் வேகமாக வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென மேற்கூரை பகுதிகள் குளியலைறைக்குள் விழுந்திருக்கின்றன. இதனை மீனாட்சியின் மகன் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
இங்கிட்டு இப்படியா?
இத்தனைக்கும் கடந்த 2 நாட்களாக இப்படி குளியல் அறையில் மேற்கூரையில் நீர் கசிவு இருக்கிறது என மீனாட்சி குடும்பத்தினர் சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆனாலும் வழக்கம் போல ஹொட்டல் நிர்வாகம் அலட்சியமாகவே இருந்திருக்கிறது. இவர்களைப் போல கொரோனா பரிசோதனை எடுத்துவிட்டு முடிவுக்காக பலரும் இங்கே முகாமிட்டிருக்கின்றனர். கொரோனா தாக்குகிறதோ இல்லையோ இப்படி அசம்பாவிதங்களே அச்சுறுத்துகின்றன என புலம்புகின்றனர் அங்கே தங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள்.
சர்ச்சையாகும் ஹோட்டல்கள்
பெங்களூருவில் இதேபோல் கொரோனா பரிசோதனைக்கு வந்தவர்கள் தனிமைப்படுத்தி தங்கி இருக்கும் ஹோட்டல்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருக்கின்றன. உணவுப் பொருட்கள் மோசம்; மூட்டைப் பூச்சி கடி, மோசமான கழிப்பிட வசதி.. என ஏகத்துக்குமான புகார்கள் இந்த ஹோட்டல்கள் மீது குவிந்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் கட்டிட மேற்கூரை விழுந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.