கொலை செய்துவிட்டு 12 கி.மீ. தூரம் தப்பிய கொலையாளி.. 3 மணி நேரத்தில் கவ்வி பிடித்த துங்கா- குட் பாய்!
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3 மணி நேரத்தில் 12 கி.மீ தூரம் ஓடிச் சென்ற மோப்ப நாய் கொலையாளியை காட்டி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சூலக்கெரே பகுதியில் ஒருவர் ஜூலை 16-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு 9 வயது மோப்ப நாயான துங்காவுடன் இரவு 9.30 மணிக்கு வந்தனர். துங்கா டாபர்மேன் வகையை சேர்ந்தது.
அப்போது அங்கு இருந்து ஓடிய துங்கா, சூலக்கெரேயில் இருந்து 2 மணி நேரம் விடாமல் ஓடியது. இப்படியே சுமார் 12 கி.மீ. தூரம் ஓடிய நாய், காசிபுரா தாண்டா கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு போய் நள்ளிரவு 12.30 மணிக்கு நின்று கொண்டு குரைத்தது.
போலி போன் ஜட்ஜ்.. என் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடிவிடுகிறார்.. நடிகையை விளாசி தள்ளிய வனிதா!
மடக்கி பிடித்த போலீஸ்
இதையடுத்து போலீஸாரும் அந்த வீட்டில் இருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் சேத்தன் (25 )என்றும் அவர்தான் நண்பர் சந்திரா நாயக்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். சேத்தனுடன் இருந்த இரு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை
போலீஸ் நிலையத்தில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருட்டு நகைகளை பங்கு பிரிக்கும் போது இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் சந்திராவை தான் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இந்த கொலை சம்பவத்தில் வெறும் 3 மணி நேரத்தில் கொலையை கண்டுபிடித்த துங்காவை அப்பகுதியில் இருந்தவர்கள் பாராட்டினர்.
பாராட்டிய ஏடிஜிபி
மேலும் துங்காவுக்கு மாநில போலீஸ் கூடுதல் டிஜிபி அமர்குமார் பாண்டேவும் மாலை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். இது தொடர்பாக புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. இதையடுத்து துங்காவுக்கு பயிற்சி கொடுத்து பராமரித்து வரும் சிவநாயக்காவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
15 ஆண்டுகள்
இது குறித்து பயிற்சியாளர் சிவநாயக்கா கூறியதாவது: பொதுவாக மோப்ப நாய்கள் 3 முதல் 4 கி.மீ. தூரம் வரை மட்டுமே மோப்பம் பிடிக்கும், ஆனால் இந்த துங்கா 12 கி.மீ. தூரம் வரை மோப்பம் பிடித்து கொலையாளியை பிடிக்க உதவியது. இந்த நாயால் 15 ஆண்டுகள் காவல் துறையில் சேவை செய்ய முடியும் என்றார்.