தமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்ற தகவல் வதந்தி.. பொய் தகவல் பரப்பியவர் பெங்களூரில் கைது
பெங்களூர்: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டுவெடிக்கும் என வதந்தி பரப்பிய மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து ராமேஸ்வரம் கடலோர கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மர்ம போன் ஒன்று வந்தது. அதில் ஒசூரில் இருந்து பேசிய நபர், ஒரு திடுக் தகவலை அளித்தார்.
இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு.. 4 மனிதவெடிகுண்டுகள் உள்பட 15 பேர் பலி
நாசவேலை
அவர் கூறுகையில் ஆந்திரம், தமிழகம், புதுவை, தெலுங்கானா, மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமான நகரங்களில் குண்டுவெடிக்கும். இந்த நாசவேலைக்காக ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் நுழைந்துள்ளார்கள்.
தகவல்
தென்னக ரயில்களில் குண்டுவெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறிய அந்த மர்ம நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து பெங்களூர் போலீஸார் மேற்கண்ட மாநிலங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்று முதல் சோதனை
இதையடுத்து தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டது.
வதந்தி
மேலும் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளும் லாட்ஜ்களில் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் தெரிவித்தவர் வதந்தி பரப்பினார் என தெரியவந்தது.
லாரி ஓட்டுநர்
இதுபோல் வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தரமூர்த்தி பெங்களூரில் கைது செய்தார். இவர்தான் காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சுவாமி சுந்தரமூர்த்தி முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.