காசு கொடுக்காததால் கடும் கோபம்.. பெற்ற தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன்!
பெங்களூரில் காசு கொடுக்காத அம்மாவை பெற்ற மகனே தீ வைத்து கொளுத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூர்: பெங்களூரில் காசு கொடுக்காத அம்மாவை பெற்ற மகனே தீ வைத்து கொளுத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூரின் சதாசிவநகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. சமீப காலங்களில் பெற்ற அம்மா அப்பாவையே அவர்களின் குழந்தைகள் தாக்கும் சம்பவம் அதிகம் ஆகியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் பெற்ற அம்மாவை துடைப்பத்தால் அடிக்கும் ஜீவன் என்ற இளைஞனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது
பெங்களூரின் சதாசிவநகர் பகுதியை சேர்ந்தவன் உத்தம். இவன் தனது பெற்றோரிடம் அடிக்கடி காசு கேட்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறான். 25 வயது நிரம்பிய உத்தம் எந்த வேலையும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
காசு கேட்டு கொளுத்தினான்
இந்த நிலையில் இரண்டு நாட்கள் முன் உத்தம், தனது அம்மா பாரத்தியிடம் மது குடிப்பதற்காக காசு கேட்டு இருக்கிறான். ஆனால் பாரத்தி காசு கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்கள் இருவருக்கு இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றவே உத்தம் அங்கேயே அவன் அம்மா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தான்.
தீவிர சிகிச்சை
அந்த நேரம் பார்த்து சரியாக அந்த இடத்திற்கு வந்த உத்தமின் அப்பா உடனே பாரத்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பாரத்தி முகம், தாடை, கழுத்து பகுதிகளில் மோசமாக காயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
தப்பினார்
இந்த நிலையில் உத்தம் மீது அவனது அப்பா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் உத்தம் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. போலீசார் இவனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.