பெங்களுரு டூ டெல்லி சென்ற.. விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்.. பயணிகள் ஷாக்!
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களுரு விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி நேற்று இரவு பயணிகளுடன் விஸ்தாரா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் விமானத்தில் பயணித்த மனோஜ் குமார் அகர்வால் என்ற பயணி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மக்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா கேஸ்கள்.. சென்னையும் ஆறுதல்!
மயங்கி விழுந்தார்
இது பற்றி பயணிகள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். அந்த வேளையில் விமானம் இந்தூர் விமான நிலைய கட்டுப்பாடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து விமானி இந்தூர் விமான நிலைய கட்டுப்பாடு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார். அவருக்கு உடனடியாக அனுமதி கிடைத்தது.
ஏற்கனவே இறந்து விட்டார்
இதன்பின்னர் விமானம் இந்தூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் மயங்கி விழுந்த மனோஜ் குமார் அகர்வாலை மீட்டு சிகிச்சைக்காக பாந்தியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மனோஜ் குமார் அகர்வாலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
டெல்லியைச் சேர்ந்தவர்
விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அகர்வால் உயிரிழந்துள்ளார். அவரது உடல்நிலையைப் பார்க்கும்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறோம் என்று பாந்தியா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சுனில் பாந்தியா கூறினார். மனோஜ் குமார் அகர்வால் டெல்லியைச் சேர்ந்தவர் என்றும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஏரோட்ரோம் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சக பயணிகள் அதிர்ச்சி
''விஸ்தாரா விமானத்தில் பயணித்த மனோஜ் குமார் அகர்வால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவ அவசரநிலையின்படி இரவு 9.30 மணியளவில் இந்தூர் விமான நிலையத்தில் விமானத்தை தரை இறங்க அனுமதி கொடுத்தோம்'' என்று இந்தூர் விமான நிலையத்தின் பொறுப்பு இயக்குனர் பிரமோத் குமார் சர்மா கூறியுள்ளார். விமானத்தில் உடன் பயணித்த பயணி மரணம் அடைந்ததால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.