தொடர்ந்து அத்துமீறும் கர்நாடகம்.. மேகதாது பகுதியில் திடீர் ஆய்வு!
மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதற்காக அம்மாநில அரசு தற்போது மேகதாது பகுதியில் ஆய்வு நடத்தி வருகிறது.
பெங்களூர்: மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதற்காக அம்மாநில அரசு தற்போது மேகதாது பகுதியில் ஆய்வு நடத்தி வருகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக அரசின் இந்த திட்டத்தால், தமிழகத்தின் விவசாயம் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகும். காவிரியில் தமிழகத்தின் உரிமை மீண்டும் பறிபோகும். இதனால் தமிழகம் இதை கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்த திட்டத்திற்கு எதிராக நேற்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் தீர்மானத்தை மதிக்காமல் மேகதாது திட்டத்தில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
தற்போது மேகதாது பகுதியில் கர்நாடக அமைச்சர் குழு ஆய்வு நடத்தி வருகிறது. நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
எந்த இடத்தில் அணை கட்டலாம், மண் எப்படி இருக்கிறது உள்ளிட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது. மத்திய அரசு இந்த ஆய்வுக்கு ஒப்புதல் அளித்த காரணத்தால் கர்நாடக தைரியமாக ஆய்வு நடத்தி வருகிறது.
இது தமிழகத்திற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. கர்நாடகா எங்கள் ஊர், இதில் நாங்கள் அணை கட்டுகிறோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.