திறந்தது கடை.. மது வாங்க செம கூட்டம்.. லேடீஸுக்கு தனி கியூ.. கலக்கறீங்களே கர்நாடகா!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் ஒரு மதுபான கடையில் கூட்டம் அலைமோதியதால் பெண்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது லாக்டவுன் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் லாக்டவுனை தளர்வுப்படுத்த மத்திய அரசு விதிமுறைகளை வகுத்தது.
இந்த நிலையில் இன்று முதல் மதுபான கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
இதையடுத்து காலை முதலே மதுபானக் கடைகளில் குடிமக்கள் கூட்டம் அலைமோதியது. மதுக் கடைகளில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்ற விதிகள் உள்ள போதிலும் ஒரு கி.மீ, தூரத்திற்கும் மேல் வரிசையில் நின்றனர். தமிழக- கர்நாடக எல்லையில் ஆனேக்கால் பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இத்தனை களேபரங்கள் ஒரு புறமிருக்க, பெங்களூரில் உள்ள கக்கடாஸ்புராவில் ஒரு மதுபான கடை முன்பு ஆண்கள், பெண்கள் என கூட்டம் கூடினர். கூட்டநெரிசலில் பெண்கள் சிக்காமல் இருக்க பெண்களுக்கென தனி வரிசை அமைக்கப்பட்டது.
அந்த வரிசையில் நின்று மதுபாட்டில்களை வேகமாக வாங்கிக் கொண்டு சென்றனர். இதை பார்த்த ஆண்களுக்கு சற்று கடுப்பு ஏற்பட்டது. தாங்கள் காலை முதல் நிற்கிறோம். இப்போது வந்த பெண்கள் தனிவரிசையில் நின்று கொண்டு மதுவாங்கி சென்றுவிட்டனரே என முணுமுணுத்தனர்.