இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, கேரளாவில் நிலைமை மோசமாகிறது
பெங்களூரு: மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியாவில் செயலில் உள்ள கோவிட் -19 கேஸ்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி 17 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நேற்று செயலில் உள்ள கொரோனா கேஸ்கள் 1.5 லட்சத்தை கடந்தன, மொத்த பாதிப்பு 1.10 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,56,498 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 10,493 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் (செயலில் உள்ள கேஸ்கள்) 74 சதவீதம் பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். செயலில் உள்ள கேஸ்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 4,421 அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில கொரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 3 சதவீதம் உயர்ந்துள்ளது.
கட்டுப்பாடுகள் வருமா
ஒரே நாளில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த காரணத்தால்., மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் அதிகாரிகளுடன் கொரோனாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று மறுஆய்வு செய்தார். விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
மும்பையில் எப்படி
நாட்டிலேயே அதிக அளவில் தொற்றுநோயைக் கொண்ட மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 5,210 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 முதல் செயலில் உள்ள கோவிட் -19 கேஸ்களின் எண்ணிக்கை 36.38 சதவீதம் மும்பையில் உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு தினமும் 900 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். நேற்று 760 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
உத்தவ் தாக்கரே
கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் அரசுகள் மகாராஷ்டிராவிலிருந்து வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி உள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, திங்கள்கிழமை (நேற்று) முதல் மாநிலத்தில் மத, சமூக மற்றும் அரசியல் கூட்டங்கள் தடை செய்யப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்
ஆர்டி-பி.சி.ஆர் சான்றிதழ்
கர்நாடகாவில், சுகாதார அமைச்சர் கே.சுதாகர், கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரித்தார். பாதிபபு எண்ணிக்கை அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியது வரலாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து மாநிலத்திற்கு வருபவர்களுக்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சான்றிதழ்களை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது" என்றார்.