அயோத்தி வீதியில் ஏழை மக்களின் நிலை பாருங்கள்.. பாஜக தலைவர்களுக்கு பிரகாஷ் ராஜ் அட்வைஸ்
பெங்களூர்: அயோத்தி வீதியில் கஷ்டப்படும் ஏழை மக்களை பாருங்கள் என பாஜக தலைவர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவுரை கூறியுள்ளார்.
அண்மை காலமாக நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் மத்திய பெங்களூர் தொகுதியில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார்.
அவருக்கு ஆம் ஆத்மி, ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரகாஷ்ராஜ் பெங்களூரில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களை பிரகாஷ் ராஜ் சந்தித்தார்.
மக்கள்
அப்போது அவர் கூறுகையில் அயோத்தி பிரச்சினை வைத்து ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு மத்திய அரசு அரசியல் நடத்துகிறது. அதை விட்டுவிட்டு முதலில் அயோத்தியின் வீதிகளுக்கு வந்து ஏழை மக்கள் எப்படி மோசமான சூழலில் வாழ்கிறார்கள் என பாஜக தலைவர்கள் பார்க்கட்டும்.
ஆட்சி கவிழ்ப்பு
இந்தியாவில் இனி எந்த ஒரு தனிபெரும் கட்சியும் முழு அளவு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு மாநில அரசியல் கட்சியும் மத்தியில் செல்வாக்கு பெற முயற்சிக்கிறது. கர்நாடகத்தில் பாஜகவினர் ஆட்சி கவிழ்ப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.
தயார்
தேர்தல் வரும் முன்பே பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களை ஏன் சந்திக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்டபோது, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் முன்பே தொகுதியில் உள்ள பிரச்சினைகளை தெரிந்து கொண்டு தயார் செய்ய வேண்டும்.
வீதி வீதியாக
அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக 8 குழுக்களை அமைத்து வீதிவீதியாக மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டுக் கொண்டு வருவதாக தெரிவித்தார்.