நடிகை ராகிணி திவேதி பாஜக உறுப்பினர் இல்லை.. பதிலளிக்க முடியாது.. கர்நாடகா பாஜக பரபரப்பு அறிக்கை
பெங்களூரு: பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகை ராகிணி திவேதிக்கு அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த காலங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் தங்கள் கட்சியின் உறுப்பினர் இல்லை என கர்நாடக பாஜக மறுத்துள்ளது, அவர் தானாக முன்வந்து பிரச்சாரம் செய்திருக்கலாம் என்று கூறியுள்ளது,
அண்மையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்ததில் நடிகை ராகிணி திவேதிக்கும் போதைப்பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த சிலருக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரங்கள் கிடைத்தது. இதையடுத்து நடிகை ராகிணி திவேதி போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.
போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஆஜரான ரியா சக்கரவர்த்தி.. விசாரணையில் கூறிய பரபரப்பு தகவல் என்ன?
கட்சியில் கிடையாது
இதனிடையே நடிகை ராகிணி திவேதி முந்தைய இடைத்தேர்தல் காலங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை என்று கர்நாடக பா.ஜ.க. மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சொந்த விருப்பத்தில்
அந்த அறிக்கையில், நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சி உறுப்பினர் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கணக்கான பிரபலங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக சொந்த விருப்பத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ராகிணியும் ஒருவராக இருக்கலாம். தேர்தலில் பிரசாரம் செய்யும்படி அவருக்கு கட்சியில் இருந்து எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை.
அவரிடம் விலகி இருக்கிறோம்
அவர் சொந்த விருப்பத்தின்பேரில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கலாம். நடிகை ராகிணி திவேதியின் சொந்த மற்றும் தொழில் முறை சார்ந்த வாழ்க்கை செயல்பாடுகள் பற்றி பா.ஜ.க. பொறுப்பேற்கவோ அல்லது பதிலளிக்கவோ முடியாது. இதில் இருந்து நாங்கள் விலகியே இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
எப்படி சிக்கினார்
முன்னதாக கன்னட திரையுலகில் 15-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக இந்திரஜித் லங்கேஷ் என்ற திரைப்பட இயக்குநர் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதையடுத்தே மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் பல பிரபலங்களை விசாரித்து வருகிறார்கள் நடிகை ராகிணி திவேதி தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் நடித்துள்ளார்.