நாடாளுமன்றத் தேர்தல்.. மண்டியாவில் போட்டியிடுகிறாரா சுமலதா அம்பரீஷ்?.. காங்கிரஸ் விளக்கம்
பெங்களூர்: நாடாளுமன்றத் தேர்தலில் மண்டியாவில் சுமலதா அம்பரீஷ் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸின் மண்டியா தொகுதியானது காங்கிரஸின் கோட்டையாகும். இந்த நிலையில் இங்கு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் 30 பேர் பலியாகிவிட்டனர். தனது சொந்த தொகுதியான மண்டியாவில் நடைபெற்ற இத்தகைய விபத்தால் மனதளவில் அம்பரீஷ் பாதிக்கப்பட்டார்.
தொகுதி பிரதிநிதி என்ற முறையில் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் அம்பரீஷின் மனைவி சுமலதாவுக்கு சீட் வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது.
மண்டியா தொகுதி
இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்டம் மஞ்சனாடி பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், மண்டியாவில் சுமலதா போட்டியிடுவது குறித்து எந்த ஆலோசனையும் இதுவரை நடத்தப்படவில்லை.
வேட்பாளர்கள்
நாடாளுமன்ற தேர்தலில் யார் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது குறித்தும் இன்னும் கட்சி முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக காங்கிரஸ்- மஜத ஆலோசனை நடத்தும். இதன் பிறகே வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்ய முடியும்.
சட்டப்படி நடவடிக்கை
டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பற்றி எனக்கு தெரியாது. இந்த விஷயத்தில் டி.கே.சிவக்குமார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்.
பாஜகவுக்கு தகுதி இல்லை
கர்நாடகத்தில் நடக்கும் கூட்டணி ஆட்சியில், 2 முதல்வர்கள் உள்ளதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். பாஜக 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்யவில்லை. அவர்களது கட்சியிலும் பலர் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து பேச பாஜகவுக்கு தகுதி இல்லை என்றார் சித்தராமையா.