நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை.. விவேக் ஓபராய் மைத்துனர் ஆதித்யா ஆல்வா சென்னையில் கைது
பெங்களூர்: கன்னட திரையுலகத்துடன் தொடர்புள்ள போதைப்பொருள் வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆதித்யா ஆல்வா என்பவரை, சென்னையில் திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
பெங்களூர் நகர இணை போலீஸ் கமிஷனர் (குற்றப் பிரிவு) சந்தீப் பாட்டீல் கைது நடவடிக்கையை உறுதி செய்துள்ளார்.
கன்னட திரையுலகின் நடிகர், நடிகைகள் சிலருக்கு ரேவ் பார்ட்டிகள் ஏற்பாடு செய்து போதை மருந்து சப்ளை செய்த வழக்கை சிசிபி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தலைமறைவு
கடந்த வருடம் செப்டம்பர் மாதம், இந்த வழக்கில், ஆதித்யா ஆல்வா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் அப்போது முதல் தலைமறைவாக இருந்து வந்தார். முன்னாள் கர்நாடக அமைச்சர் மறைந்த, ஜீவராஜ் ஆல்வாவின் மகன்தான் இந்த ஆதித்யா. மேலும் பிரபல நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனரும் ஆகும். இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக ஆதித்யா பெயர் உள்ளது.
ராகிணி திவேதி கைது
இது தொடர்பாக முன்னணி நடிகை ராகிணி திவேதி போன்றோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான், சென்னையில் ஆதித்யா தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
சென்னையில் கைது
இதையடுத்து அதிரடியாக சென்னை விரைந்த பெங்களூர் போலீசார், ஆதித்யா ஆல்வாவை கைது செய்து பெங்களூர் அழைத்து வந்துள்ளனர்.
விசாரணை
ஆதித்ய ஆல்வாவை பெங்களூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.