ஏரோ இந்தியா 2019 தொடங்கியது... வானை வசப்படுத்திய விமானப் படை... பார்வையாளர்கள் உற்சாகம்
Recommended Video
பெங்களூர்: ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சியில், விமானப்படையின் விமானங்கள் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தி சாகசங்களில் ஈடுபட்டன. இதனைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.
ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சி புதனன்று துவங்கியது, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் படைப்புகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் டசால்ட் ஏவியேஷன் தயாரிப்பான ரஃபேல் விமானங்கள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளின் தயாரிப்பு விமானங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சியை ஒட்டி, செவ்வாய்க்கிழமை, சாகச பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த போது இரு போர் விமானங்கள் மோதி, விபத்துக்கு உள்ளானது. ஒரு விமானி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கண்காட்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், விண்வெளி மற்றும் இதர துறைகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு பெரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், 2300 புதிய விமானங்களை இந்தியா வாங்க உள்ளது என்றும் இந்தியாவில் உற்பத்தி இலக்குகளை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அதே நேரம், சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமைமிக்க அதிநவீன 'தேஜாஸ்' விமானத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏரோ இந்தியா ஷோ - பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996ம் ஆண்டு முதல் இந்த கண்காட்சி இங்கு நடைபெற்று வருகிறது. 2017ம் ஆண்டிற்கு பிற்கு இந்த கண்காட்சி நாளை தொடங்க இருப்பதால் பெங்களூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான டிக்கெட் விற்பனையும் அதிகரித்துள்ளது.