திமுக இருக்கட்டும்.. அப்படியே பெங்களூருக்கு வாங்க.. பிரசாந்த் கிஷோருக்கு வந்த அழைப்பு
பெங்களூர்: தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி திமுகவுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இணைந்துள்ளார் பிரபல அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர்.
அந்த வரிசையில் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் அவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியுடன் கைகோர்க்க உள்ளார்.
சுமார் பத்து வருடங்கள் முன்புவரை குமாரசாமி கர்நாடக அரசியலில் மாபெரும் அரசியல் தலைவராக காணப்பட்டார். ஆனால் இப்போது நிலைமை அப்படி கிடையாது.
மஜத
2018 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 37 தொகுதிகளில் மட்டுமே அந்தக் கட்சி வெற்றி பெற முடிந்தது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. தேவகவுடா ஒரு முன்னாள் பிரதமர். குமாரசாமி ஏற்கனவே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியோருடன் கூட்டணி வைத்து முதல்வராக பதவி வகித்தவர். சாதிய ரீதியான வாக்கு வங்கிகளிலும் குறைவில்லாத கட்சி. ஆனால் இத்தனை இருந்தும் ஆட்சியமைப்பதற்கு முடியாமல் திணறி வருகிறது மதசார்பற்ற ஜனதா தளம்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் தான் பிரசாந்த் கிஷோருடன் குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதை அவரே இன்று உறுதி செய்தார். பெங்களூரில் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி, 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பாக, பிரசாந்த் கிஷோருடன், நான் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. மேலதிக தகவல்களை நான் உங்களுக்கு பின்னர் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
டிமாண்ட்
பிரசாந்த் கிஷோருக்கு வரவர டிமாண்ட் கூடிக்கொண்டே செல்கிறது. சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த கட்சி அமோக வெற்றி பெற்றது. அதற்கு முன்பாக ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு ஆலோசனை வழங்கினார். அவர் முதல்வரானார். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஸ்டாலின் அவரை தனது ஆலோசகராக பணியமர்த்தி உள்ளார்.
பிரசாந்த் கிஷோர் முடிவு என்ன
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. தேசிய கட்சிகள் ஆதிக்கம் வகிக்கக்கூடிய, அந்த மாநிலத்தில் பிரசாந்த் கிஷோர், மேஜிக் எடுபடுமா, குமாரசாமியுடன், கை கோர்க்க அவர் முன் வருவாரா என்பதெல்லாம் அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.