ஆத்தீ இந்த டிராக்கில எப்படி ரயில் ஓட்டறது?.. கொங்கன் ரயில்கள் ரத்து.. கர்நாடகம் விரைகிறார் நிர்மலா
பெங்களூர்: கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கொங்கன் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கர்நாடகத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மொத்தமுள்ள 12 மாவட்டங்களில் 8 மாவட்டங்களும், 60 தாலுக்காக்களில் உள்ள 25 தாலுக்காக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 14 மலை சாலைகளில் 11 சாலைகள் மூடப்பட்டுள்ளன. பெல்காம், ஹூப்ளி, தர்வாட், சிமோகா, கர்வார், மங்களூர், மடிகேரி உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மலநாடு பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது.
விரைவு குழு
பட்டாடகல், நஞ்சகூட், பாகமண்டலா ஆகிய இடங்களில் உள்ள பழமையான கோயில்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடாக் மாவட்டத்தில் ஹோலியேலூர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை விரைவு குழுவினர் மீட்டனர்.
120 பேர் மீட்கப்பட வேண்டும்
மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் நீர் மட்டம் அதிகமாக காணப்படுகிறது. பாலகோடு மாவட்டத்தில் உள்ள பட்டடகல்லு கோயிலில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் சிக்கிய 66 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 120 பேர் மீட்கப்பட வேண்டும்.
கடும் பாதிப்பு
கர்வாரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் தண்டவாளங்களை சுற்றியுள்ள மணல் சரிந்து காணப்படுகிறது. வெறும் இரும்பு தண்டவாளம் மட்டுமே தனியாக எலும்புகூடு போல் தெரியும் அளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகம் பாதிப்பு
இதையடுத்து அந்த வழியே செல்லும் கொங்கன் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த கனமழைக்கு கர்நாடகத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட வருகிறார்.